நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை... மாநில தலைநகரங்களில் 3 இடங்களில் ஏற்பாடு..!
டெல்லி: தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடைபெறுகிறது.
கடந்த மார்ச், ஏப்ரல், மே, மாதங்களை காட்டிலும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல் உயிரிழப்புகளும் பரவலாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இந்தச் சூழலில் இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது.
இருப்பினும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கத்தை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதனிடையே நாளை நாடு முழுவதும் ஜனவரி 2-ம் தேதியன்று ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் குறைந்தது 3 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மஹாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் தலைநகரங்களுக்கு பதிலாக உள் மாவட்டங்களில் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 96 ஆயிரம் கொரோனா தடுப்பூசி செலுத்துனர்களுக்கு இதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications