இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 5,233 பேர் பாதிப்பு
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 5,233 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,233 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 3,345 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,233 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,90,282 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 3,714 ஆக குறைந்திருந்த நிலையில், இன்று 5,233 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 3,345 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,36,710 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.72 சதவீதமாக உள்ளது.
அதிகப்பட்சமாக மும்பையில் 1,242 பேருக்கு புதிதாக கரோனா பெருந்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. அதற்கு முந்தைய தினம் பாதிப்பு 676 ஆக இருந்தது. தமிழ்நாட்டிலும் புதிதாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. நூற்றுக்கு கீழான எண்ணிக்கையில் இருந்த பாதிப்புகள் தற்போது 100ஐ கடந்து பதிவாகிவருகின்றன.

தற்போது கொரோனா பாதிப்பினால் 28,857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.07 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,715 ஆக உள்ளது.
நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 194.43 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,94,086 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications