சீனா 4வது, இத்தாலி 3வது, இந்தியா 2வது கட்டத்தை தொட்டது.. மருத்துவ கவுன்சில் இயக்குனர் எச்சரிக்கை
டெல்லி: சீனாவில் 4வது கட்டம்.. இத்தாலி மற்றும் ஸ்பெயினில் 3வது கட்டத்தில் உள்ள நிலையில், தற்போது 2வது கட்டத்தை இந்தியா தொட்டுள்ளது என அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பலராம் பார்கவா எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே படுபயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 245630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,048 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். 88437 பேர் குணமாகி உள்ளனர். சுமார் 1.60 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகிலேயே மிக அதிக அளவாக இத்தாலியில் 3405 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு சுமார் 40000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3200 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் மற்றும் ஸ்பெயினில் சுமார் 15000க்கம் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் சுமார் 13000த்தை தாண்டி உள்ளது. அங்கு உயிரிழப்பும் 200 ஐ தாண்டி உள்ளது.
4பேர் உயிரிழப்பு
இந்தியாவில் 3 பேருக்கு பரவி இருந்த கொரோனா இப்போது 172 பேருக்கு பரவி உள்ளது. 4 பேர் இதுவரை இறந்துள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 45 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் உத்தரப்பிரதேசம், ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்நிலையில் இந்தியா தற்போது கொரோனா வைரஸ் பரவும் விதத்தில் இரண்டாவது கட்டத்தை எட்டியிருப்பதாக அகில இந்திய மருத்துவ கவுன்சில் இயக்குனர் பலராம் பார்கவா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. மூன்றாவது கட்டத்திற்கு செல்லவில்லை.
சமூகத்தையே பாதிக்கும்
மூன்றாவது கட்டம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கே பரவுவதாகும். அதை நாம் எட்டிவிடவே கூடாது. சர்வதேச எல்லைகளை மூடுவது.. அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை பொறுத்து பரவலை தடுக்கலாம் என்றார்.
முதல் வகை எப்படி
தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை நான்கு வகைகளாக பிரிக்கலாம். முதல் நிலை என்பது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் பரவுவது. இரண்டாவது நிலை என்பது பாதித்த நபர்களிடம் இருந்து குடும்பத்தினருக்கோ, நண்பருக்கோ கொரோனா வைரஸ் பரவும். இதில் குறைவான நபர்களுக்கே கொரோனா பரவும். இதன்படி யார் மூலம் யாருக்கு கொரோனா பரவியது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். அத்துடன் வைரஸின் சங்கிலி தொடரை அறுத்தெறிந்துவிட முடியும்.
ஸ்பெயின் அமெரிக்கா
ஆனால் மூன்றாம் நிலை என்பது சமூகத்திற்கே தொற்று நோய் ஏற்படுவது ஆகும். எல்லாரையும் பாதிக்க ஆரம்பிக்கும். யார் மூலம் பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. இந்த நிலையில் இப்போது இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன..
சீனா இத்தாலியில்
நான்காம் நிலை என்பது மிகவும் மோசமான நிலை ஆகும்.எப்போது தொற்று குணமாகும் என்பதே தெரியாது. அப்படி ஒரு பேரிடர் தான் சீனாவில் ஏற்பட்டது. இப்போது இத்தாலியில் ஏற்பட்டு வருகிறது. எனவே 3வது கட்டத்தை அடையாமல் இந்தியா தப்பிக்க வேண்டும் என்றால் மக்கள் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு சொன்னபடி கவனமாக சுயசுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். வெளியில் செல்லக்கூடாது. குழந்தைகள், பெரியவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக முன்வந்து உடனடியாக தனிமைப்படுத்துதல் வேண்டும். இதை செய்தால் மட்டுமே 3வது கட்டத்தை எட்டமாட்டோம்.