ரயில், விமானப் போக்குவரத்து மே 15-க்குப் பின்னரே தொடங்கும்?
டெல்லி: 40 நாட்கள் லாக்டவுன் நிறைவடைந்தாலும் மே 15-ந் தேதிக்குப் பின்னரே நாட்டில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Recommended Video
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை முதல் லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தளர்வுகள் குறித்து தமிழக அரசின் வல்லுநர் குழு பரிசீலித்து வருகிறது. இக்குழுவின் அறிக்கை நாளைதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னரே தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும்,.
இதனிடையே லாக்டவுன் மே 3-ந் தேதி முடிவடையும் விமானப் போக்குவரத்து தொடங்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து செய்திகள் வெளியாகின. ஆனால் லாக்டவுன் முடிவடைந்தாலும் ரயில், விமானப் போக்குவரத்தை மே 15-ந் தேதிக்கு பின்னரே மத்திய அரசு தொடங்கக் கூடும் என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பிற மாநிலங்களில் அவதிப்படும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாகவும் மே 3-ந் தேதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மே 15-ந் தேதிக்குப் பின்னர் வரை ரயில், போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டாம் என்றும் அதன் பின்னர் பிரதமர் மோடி உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ராஜ்நாத்சிங் சுட்டிக்காட்டியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
விமான சேவைகள் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம்
ஏர் இந்தியா நிறுவனமானது மே 4-ந் தேதி உள்நாட்டு விமான சேவைகளை இயக்குவதாலும் ஜூன் 1-ந் தேதி சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதாலும் முன்பதிவு தொடங்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் மே 4-ந் தேதி முதல் விமான சேவைகள் இயக்கப்படும் என கூறியிருந்தது.
The Ministry of Civil Aviation clarifies that so far no decision has been taken to open domestic or international operations.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) April 18, 2020
Airlines are advised to open their bookings only after a decision in this regard has been taken by the Government.@MoCA_GoI @DGCAIndia @AAI_Official
ஆனால் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரில் நேற்று இரவு தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் முடிவுகளுக்குப் பின்னரே முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.