தடுப்பூசி போட்டாலும் விடாமல் துரத்தும் டெல்டா கொரோனா.. தப்பிப்பது எப்படி.? ஆய்வாளர்கள் புது விளக்கம்
டெல்லி: இந்தியாவில் தற்போது வரை டெல்டா கொரோனா வைரசின் ஆதிக்கம் தொடர்கிறது. அதேபோல தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மத்தியிலும் டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பும் உயிரிழப்பும் உச்சத்தில் இருந்தன,
அப்போது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்ப தொடங்கின. தினசரி உயிரிழப்புகள் ஒரு கட்டத்தில் நான்காயிரம் வரை கூட சென்றது.
சீன எல்லையில் திடீரென அதிகரிக்கும் 'டிரோன்' நடமாட்டம்.. பதிலடி கொடுக்கும் இந்தியா.. மீண்டும் பதற்றம்
டெல்டா கொரோனா
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட டெல்டா கொரோனா வைரஸே முக்கிய காரணமாக இருந்தது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தான் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளிலேயே வேகமாக பரவுகிறது. இந்நிலையில், தற்போது எடுக்கப்பட்ட ஜீனோ வரிசைப்படுத்துதலிலும் இந்தியாவில் டெல்டா கொரோனாவின் ஆதிக்கம் தொடர்வது தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போட்டாலும் பாதிப்பு
அதேபோல தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்புகளும் டெல்டா கொரோனாவால் தான் அதிகம் ஏற்படுகிறது. ஆனால், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களில் 9.8% பேருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதேபோல 0.4% பேர் மட்டுமே உயிரிழக்கும் சூழல் உருவாகிறது.
கட்டுப்படுத்தலாம்
இது குறித்து இந்தியாவில் ஜீனோ வரிசைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் INSACOG அமைப்பு கூறுகையில், "இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட டெல்டா கொரோனா தான் காரணம். அதேநேரம் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதன் மூலமும் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்துவதன் மூலமும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்" என தெரிவித்தனர்.
உலக நாடுகளில் டெல்டா
இந்தியாவுக்கும் வெளியே மற்ற நாடுகளிலும்கூட டெல்டா கொரோனா தற்போது பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் டெல்டா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. ஆனால் தடுப்பூசி பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் தான் உள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல புதிய உருமாறிய கொரோனா வகைகள் தோன்றினாலும், அவை எதுவும் கவலைக்குரிய கொரோனாவாக மாறுவதில்லை. தற்போது வரை டெல்டா கொரோனாவை காட்டிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வகைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றே INSACOG தெரிவித்துள்ளது.
தடுப்பூசி முக்கியம்
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் டெல்டா கொரோனா தான் அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன. அந்த சமயத்தில் நாட்டில் கண்டறியப்பட்ட வைரஸ் பாதிப்புகளில் 87% டெல்டா கொரோனாவாகவே இருந்தது. அதேபோல, தற்போது அமெரிக்காவிலும் உறுதி செய்யப்படும் பாதிப்புகளில் 83% டெல்டா கொரோனாவாகவே உள்ளது. இவை மூலம் டெல்டா கொரோனா மற்ற வகைகளை விட வேகமாக பரவுவது தெளிவாக தெரிகிறது. தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், அது பெரும்பாலும் தீவிரமான பாதிப்பாக மாறுவதில்லை. இதனால் தடுப்பூசி மட்டுமே தற்போதைய சூழலில் கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது.
தொடர் ஆய்வு
இந்தியாவில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ளது. இங்கு புதிய உருமாறிய கொரோனா எதாவது உருவாகியுள்ளதா என்பது குறித்தும் தொடர்ச்சியான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக INSACOG அமைப்பு குறிப்பிட்டுள்ளது.