குறையும் இரட்டிப்பு விகிதம்.. ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு இருந்தாலும்.. நாட்டிற்கே இரண்டு குட் நியூஸ்
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 11 நாட்களாக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்புகளின் இரட்டிப்பு விகிதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் 3.4 நாட்களாக இருந்தது. அதன்பிறகு 9.1 நாளாக உயந்தது. இப்போது அது 11 நாட்களாகி உள்ளது.
தமிழ்நாடு, பஞ்சாப், காஷ்மீர், ஒடிசா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இரட்டிப்பு விகிதம் 11 முதல் 20 நாட்களாக உள்ளது. மேலும் கர்நாடகா, லடாக், அரியானா, உத்தரகாண்ட் , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 20 முதல் 40 நாட்களாக இரட்டிப்பு விகிதம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதன் மூலம் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி கொரோனா பாதிப்பு 33050 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனாவால் குணமாகுபவர்களின் விகிதம் 13 .06 சதவீதத்தில் இருந்து இரு வாரங்களில் 25.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவால் இறப்பு விதிகம் என்பது மொத்த பாதிப்பில் 3.5 சதவீதமாக உள்ளது . கொரோனாவால் ஆண்கள் 65 சதவீதம் பேரும், பெண்கள் 35 சதவீதம் பேரும் பாதிக்கப்படுகிறார்கள்" என்றார்.
Recommended Video
முன்னதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பேசுகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து நிலைகளிலும் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டு முன்னோக்கி சென்றுள்ளது. இனிவரும் நாட்களில் இந்தியா வெற்றி பெறும். மே மாதத்திற்குள் இந்தியாவிலேயே கொரோனா கண்டுபிடிப்பு கருவிகள் தயாரிக்கப்படும் என்றார்.