முடிவுக்கு வரும் கொரோனா 3ஆம் அலை? தமிழகம் முதல் டெல்லி வரை.. அத்தனையும் இந்த ஒன்றை தான் காட்டுகிறது
டெல்லி: கடந்த சில வாரங்களாகப் பல முக்கிய நகரங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வந்த நிலையில், மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் கிட்டதட்ட எல்லா மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தது. வேக்சின் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படத் தொடங்கியதும் கொரோனா கேஸ்கள் மேலும் விரைவாகக் குறையத் தொடங்கியது.
இருப்பினும், தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது. எல்லா மாநிலங்களிலும் தினசரி கேஸ்கள் மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியது.
தீவிரமாய் பரவும் கொரோனா.. உலகளவில் இதுவரை 331,127,034 பேர் தொற்றுக்கு பாதிப்பு.. 5,563,105 பேர் பலி
5 மாநிலங்கள்
குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவுக்குச் சென்றது. நாட்டின் தினசரி கேஸ்கள் பல மாதங்களுக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2.50 லட்சத்தைத் தொட்டது. வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு பெரும்பாலும் லேசான கொரோனா பாதிப்பே ஏற்படுகிறது என்றாலும் கூட, கொரோனா கேஸ்கள் மிகவும் அதிகரித்தால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா
இந்நிலையில், இது தொடர்பாக மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் போதிலும் கூட, பல முக்கிய நகரங்களில் ஏற்கனவே தினசரி கேஸ்கள் மெல்லக் குறையத் தொடங்கிவிட்டன. நாட்டில் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 31,111 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் கொரோனா பாதிப்பை விட 10 ஆயிரம் குறைவாகும்.
டெல்லி
அதேபோல தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை 18,286 கேஸ்கள் மற்றும் 28 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தது. இது நேற்று, திங்கள்கிழமை 12,527 கேஸ்களாக குறைந்துள்ளன. அதேநேரம் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 27.99% என்ற மோசமான நிலையில் தான் உள்ளது. அங்கு தற்போது 2784 கொரோனா படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் டெல்லியில் குறையத் தொடங்கியுள்ளது
மேற்கு வங்கம்
அதேபோல மேற்கு வங்கத்திலும் கொரோனா கேஸ்கள் குறையத் தொடங்கியுள்ளதால் ஊரடங்கில் சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்குத் திங்கள்கிழமை 9,385 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை1.58 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல கடந்த இரண்டு வாரங்களாக பாசிட்டிவ் விகிதம் 37% என்ற நிலையில் இருந்த நிலையில், இது தற்போது 26.43% ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டிலும் கூட கடந்த 2 நாட்களாக வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது.கடந்த 15ஆம் தேதி 23,989 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்த நிலையில், இது நேற்று 23,443ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை சுமார் 200 வரை குறைந்துள்ளது. இது வரும் காலத்தில் மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
குறையும்
நாட்டின் கொரோனா பாதிப்பு மோசமாக இருந்த மாநிலங்களில் அவை மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது நல்ல ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரம் தற்போது பண்டிகை காலம் என்பதால் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் வல்லுநர்களிடையே அதிகரித்துள்ளது. இருப்பினும், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளில் நடந்ததை வைத்துப் பார்க்கும்போது வைரஸ் பாதிப்பு இன்னும் சில நாட்களில் குறையத் தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.