பிரசவத்தின் போது தாய்மார்களிடம் இருந்து.. குழந்தைகளுக்குப் பரவும் கொரோனா.. வெளியான பரபர தகவல்
டெல்லி: உலகெங்கும் கொரோனா பரவல் இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வரும் நிலையில், தாய்மார்கள்- குழந்தைகள் மத்தியில் ஏற்படும் கொரோனா பரவல் குறித்து புதிய ஆய்வு வெளியாகி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன் பின்னர், உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் ஒரு வழி செய்துவிட்டது.
ஆல்பா, டெல்டா என கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், ஓமிக்ரான் கொரோனா சர்வதேச அளவில் கொரோனா அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

கொரோனா வைரஸ்
அதன் பின்னர் கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னர் தான் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. கிட்ட தட்ட உலகின் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பூஸ்டர் டோஸ் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் வேக்சிகன் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதன் காரணமாகவே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் குறித்தும் கொரோனா பரவல் குறித்தும் உலகெங்கும் ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரசவம்
இந்நிலையில், பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்பும், தாயாரிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் என்று மருத்துவ இதழான தி பிஎம்ஜேவில் செய்தி வெளியானது. இருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகள் அரிதானவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்த 14,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த ஆய்வுக்காகப் பரிசோதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

2 சதவிகம் குறைவு
அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளில் 2 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகப் பிரசவம் சமயத்தில் தாய்மார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, அது எளிதாகக் குழந்தைகளுக்குப் பரவுவது தெரிய வந்துள்ளது. அதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மூலம் தான் குழந்தைக்கு கொரோனா பரவுகிறது என்பதற்கும் ஆதாரம் இல்லை. மருத்துவமனைகளில் யார் மூலம் வேண்டுமானாலும் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தாய்ப்பால்
கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகுச் சரியான நடவடிக்கைகள் எடுத்தால் குழந்தைகளுக்குத் தொற்று குறைவாகப் பரவுவது குறைவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல தாய்ப்பால் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கும் கொரோனா பரவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிக்கத் தயங்கத் தேவையில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications