மே 15-ல் கொரோனா மோசமான உச்சத்தில் இருக்கும்.. மே இறுதியில் அடியோடு சரியும்.. விஞ்ஞானிகள் கணிப்பு!
டெல்லி: அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் கொரோனா வைரஸ் இந்தியாவில் புதிய உச்சத்தை தொடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதன்பின்னர் மே மாதம் இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய சரிவை கண்டறியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிவேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
குவியும் நோயாளிகள்... பரபரக்கும் மருத்துவமனைகள்.. பணிச்சுமையால் பரிதவிக்கும் செவிலியர்கள்..!
கொரோனா கோர முகம்
அனைத்து மாநிலத்திலும் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் இல்லை. மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு மகாராஷ்டிரா, டெல்லியில் தினமும் ஏராளமானோர் உயிரை பறித்து வருகிறது.
உச்சம் பெறும்
இந்த நிலையில் இந்தியாவில் மே மாதம் 15-ம் தேதிக்குள் கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என இந்திய விஞ்ஞானிகள் குண்டை தூக்கி போட்டுள்ளனர். இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:- அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சத்தை தொடும். குறிப்பாக மே 11 மற்றும் 15 தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் 30 முதல் 35 லட்சம் வரையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரக்கூடும்.
டெல்லி நிலைமை பரிதாபமாகும்
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் ஏப்ரல் 25 முதல் 30-ம் தேதிக்குள் புதிய பாதிப்புகள் அதிகம் காணப்படலாம். மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் ஏற்கனவே உள்ள பாதிப்புகள் புதிய உச்சத்தை எட்டலாம். கொரோனா இவ்வாறு மிகப் பெரிய உச்சம் பெறுவதற்கு பல்வேறு சாத்தியக்கூறுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
வேகமாக சரியும்
அதே வேளையில் மே மாதம் நடுப்பகுதியில் உச்சம் பெறும் கொரோனா, அதன்பின்னர் மே மாதம் இறுதியில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய சரிவை கண்டறியும். இதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளானர். சூத்ரா மாதிரியின் கணிப்பு தினந்தோறும் ஏற்படக்கூடிய தொற்று எண்ணிக்கையை ஒத்துள்ளது . அதாவது நாளொன்றுக்கு ஒரு நபரால் எத்தனை நபருக்கு தொற்று பரவுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இது கணிக்கப்படுகிறது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.