இந்தியாவில் இன்னும் ஆறு முதல் எட்டு மாதங்களில்.. கொரோனா 3ஆம் அலை.. மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் 3ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும் அப்போது அதிக பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் பாதிப்பு பெரியளவில் இருக்காது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு இந்தியா டூடே செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது.
அதேநேரம் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் உச்சத்தை நெருங்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் கொரோனா 3ஆம் அலை பற்றிய கணிப்புகளை வல்லுநர் குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
வல்லுநர் குழு
இந்தியாவில் கொரோனா பரவலின் நிலை குறித்தும், அதனை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கவும் மத்திய அரசு மூன்று ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு சூத்ரா - SUTRA (Susceptible, Undetected, Tested (positive) and Removed Approach) என்ற முறையின் அடிப்படையில் கொரோனா பரவல் குறித்த கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
வல்லுநர் தகவல்
இது குறித்து இந்தியா டூடே செய்தி நிறுவனத்திற்கு இந்த குழுவின் உறுப்பினரும் ஐஐடி கான்பூர் பேராசிரியருமான மனிந்திர அகர்வால் கூறுகையில், "மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகண்ட், குஜராத், ஹரியானா,டெல்லி, கோவா போன்ற மாநிலங்கள் கொரோனா 2ஆம் அலை ஏற்கனவே உச்சத்தைக் கண்டுள்ளன" என்றார்.
கொரோனா 2ஆம் அலை
இந்த வல்லுநர் குழு மே மாத இறுதியில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகக் குறைந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் இறுதியில் இது மேலும் குறைந்து 20 ஆயிரம் கேஸ்களாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் வரும் மே 29-31 தேதிகளிலும், புதுச்சேரியில் 19-20 தேதிகளிலும் கொரோனா உச்சமடையும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்கள், ஹிமச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் விரைவில் 2ஆம் அலை உச்சத்தைத் தொடும் எனக் கூறப்பட்டுள்ளது.
3ஆம் அலை எப்போது
இந்நிலையில், இந்த குழு கொரோனா மூன்றாம் அலை குறித்த கணிப்புகளையும் அளித்துள்ளது. அதன்படி இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அப்போது அதிக பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதாலும், கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நோயெதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதாலும் பாதிப்பு பெரியளவில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான கணிப்பு
இந்த குழு இதே சூத்ரா முறையைப் பின்பற்றி கொரோனா 2ஆம் அலை குறித்த தகவல்களையும் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதில் கொரோனா மே 2ஆம் தேதி 2ஆம் அலை உச்சமடையும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு சில நாட்களுக்குப் பின்னரே, கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முறை துல்லியமற்ற, அதிக பிழைகள் கொண்டிருப்பதால் சரியான கணிப்புகளை வழங்குவதில்லை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் விமர்சித்துள்ளனர்.