நாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடங்கிவிட்டதா? எல்லா அறிகுறிகளும் அதையே காட்டுகிறது.. பரபர ரிப்போர்ட்
டெல்லி: R value என்று அழைக்கப்படும் கொரோனா பரவும் வேகம் கடந்த மே 7ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக அதிகரித்துள்ளது. இது கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
அப்போது R value எனப்படும் கொரோனா பரவும் வேகம் 1க்கும் மேல் இருந்தது. ஒரு கொரோனா நோயாளியிடம் இருந்து எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதையே R value குறிப்பிடுகிறது.

R value
இந்நிலையில், இந்த R valueஆனது கடந்த ஜூலை 27ஆம் தேதி மீண்டும் 1ஐ தாண்டியுள்ளது. கொரோனா 2ஆம் அலை முடிவுக்கு வந்த பிறகு R value மீண்டும் 1ஐ தாண்டுவது இதுவே முதல்முறை எனப் பேராசிரியர் சீதாப்ரா சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 27 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் R value 1.03ஆக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆபத்து
R valueஆனது மீண்டும் 1ஐ கடந்துள்ளதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதுபோன்ற பெருந்தொற்று ஏற்படும் காலங்களில் R value ஒன்றுக்குக் கீழ் இருக்க வேண்டும் என்பதே சுகாதார வல்லுநர்களின் விருப்பம். அப்படி இருந்தால் ஒருவர் மூலம் அதிகப்படியான நபர்களுக்கு வைரல் பரவாது என்பதால் வைரஸ் பாதிப்பு அதுவாகவே விரைவில் கட்டுக்குள் வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

எங்கு அதிகம்
நாட்டில் நேற்று மட்டும் 40,134 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 422 பேர் உயிரிழந்துள்ளனர். R value ஒன்று என இருந்தால், ஒரு கொரோனா நோயாளி, சராசரியாகக் குறைந்தபட்சம் ஒரு நபருக்காவது கொரோனாவை பரப்புகிறார் எனக் குறிக்கும். இந்தியாவில் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் திரிபுராவைத் தவிர, பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்களில் R value 1ஐ விட அதிகமாக உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் R value 1ஐ நெருங்குகிறது.

தற்காலிகமானதா?
இவை தவிரக் கேரளா, கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவலை அளிப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து பேராசிரியர் சீதாப்ரா சின்ஹா கூறுகையில், "R value தற்காலிகமாக மட்டும் 1ஐ தாண்டியிருக்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் இது மீண்டும் 1க்கு கீழ் செல்ல வாய்ப்பு உள்ளது.

பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்
ஆனால் நாட்டின் பல மாநிலங்களில் R value 1ஐ விட அதிகமாக உள்ளதை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரங்களில் R value 1ஐ தாண்டியுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா 2ஆம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, இப்போதைய சூழலில் இது தற்காலிகமான நிகழ்வா இல்லையா என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications