விரைவில் பள்ளி திறப்பு.. ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கு வேக்சின்.. நமக்கு இருக்கும் ஆப்ஷன்கள் என்ன
டெல்லி: இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் சிறார்களுக்கான வேக்சின் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சிறார்கள் மத்தியில் ஏற்கனவே சில நிறுவனங்கள் கொரோனா வேக்சிகன் சோதனையைத் தொடங்கிவிட்டன.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு
சிறார்களுக்கு வேக்சின் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதால் அடுத்த அலையில் அவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5% கீழ் குறைவாக உள்ள இடங்களில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். ஒருவரின் வாழ்க்கையில் பள்ளிப்படிப்பு என்பது மிகவும் முக்கியம் என்பதால், பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆன்டிபாடிகள்
மேலும், சமீபத்தில் நடத்தப்பட்ட சீரோ சர்வே-இல் இந்தியாவில் உள்ள சிறார்களுக்கு மத்தியில் ஆன்டிபாடிகள் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், வரும் செப்டம்பர் மாதம் முதல் சிறார்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் கோவாக்சின், ஸைடஸ் காடிலா, பைசர் ஆகிய வேக்சின்களில் ஒன்றே முதலில் சிறார்களுக்குச் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாக்சின்
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே 2 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் சோதனை தொடங்கிவிட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 6 முதல் 12 வயதுடையவர்களுக்கு 2ஆம் டோஸ் கோவாக்சின் சோதனை முறையில் செலுத்தப்பட்டு வருகிறது. 2 முதல் 6 வயதுடையவர்களுக்கு அடுத்த வாரம் முதல் 2ஆம் டோஸ் கோவாக்சின் சோதனை முறையில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபத்தை சேர்ந்த பாரத் பயேடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியாகும்.

ஸைடஸ் காடிலா
ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் இந்த வேக்சின், தற்போது சோதனையில் இருக்கும் மற்றொரு இந்திய வேக்சின் ஆகும். 12 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஸைடஸ் காடிலா வேக்சின் சோதனை ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்த வேக்சினுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே டிஎன்ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் கொரோனா வேக்சின் இதுவாகும்.

பைசர் தடுப்பூசி
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி அதிகபட்ச செயல்திறன் தரும் வேக்சின்களில் ஒன்று. பிரிட்டன், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் முதல் சாய்ஸாக பைசர் தடுப்பூசியே உள்ளது. இந்தியாவில் பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்து நேரடியாகப் பயன்படுத்த விரைவில் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி சிறார்களுக்கும் செலுத்த அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் ரன்தீப் குலேரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாடர்னா & ஸ்புட்னிக் வி
இவை தவிர மாடர்னா நிறுவனமும் தனது ஸ்பைக்வேக்ஸ் என்ற தடுப்பூசியைச் சிறார்கள் மத்தியில் சோதிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியாகக் கருதப்படும் ஸ்புட்னிக் வி வேக்சினும் சிறார்கள் மத்தியிலான சோதனையை ரஷ்யாவில் தொடங்கியுள்ளது. ஆனால், மாடர்னா மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் சிறார்களுக்கு அளிப்பது குறித்து எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications