டெல்லி சட்டசபை தேர்தல்.. மந்தமான வாக்குப்பதிவு.. ஆட்சி யாருக்கு? 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை
Recommended Video
டெல்லி: தலைநகர் டெல்லியை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிறைவடைந்தது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து பிப்ரவரி 8ம் தேதி, தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் 11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 60 சதவீதம் வாக்கு பதிவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தமட்டில் டெல்லியில் அதிக இடங்களை எந்த கட்சி கைப்பற்றுகிறதோ அந்த கட்சியே மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாஜகவே வென்றது.
இதையடுத்து அந்த கட்சியே மத்தியிலும் ஆட்சியை பிடித்தது. அப்படி மத்தியில் ஆளும் அரசை தீர்மானிக்கும் டெல்லியை ஆளப்போவது யார் என்பது வரும் 11-ஆம் தேதி தெரியவரும். 1.47 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதில் 2.32 லட்சம் பேர் 18 முதல் 19 வயதுடைய வாக்காளர்கள் ஆவர்.
ஆண் வாக்காளர்கள் 81,05,236 பேரும், பெண் வாக்காளர்கள் 66,80,277 பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 869 பேரும் மூத்த குடிமக்கள் 2,04,830 பேரும் உள்ளனர். 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் டெல்லி முழுவதும் 2,689 இடங்களில் 13,750 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 516 இடங்களில் உள்ள 3,704 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. 40 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர்.