டெல்லியில் வெளுத்து வாங்கியமழையால் சாலைகளில் வெள்ளம் - போக்குவரத்து கடும் பாதிப்பு
டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கியதால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ள நீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. காலை முதல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை நாடுமுழுவதும் ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, வட இந்திய மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல சாலை, ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் கனமழை
நாட்டின் தலைநகர் டெல்லியில் 15 நாட்கள் தாமதமாக பருவமழை தொடங்கியது. நேற்று இரவு முதல் டெல்லியிலும் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதால் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது.

வாகன ஓட்டிகள் பாதிப்பு
குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத், பல்லாப்கர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குரு கிராமில் பல பகுதிகளில் முழங்கால் அளவு வெள்ளநீர் தேங்கியுள்ளதால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

3 நாட்களுக்கு மழை
இதனிடையே டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை நீடிக்கும் எனவும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

பருவமழை தீவிரம்
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications