காஷ்மீர் நிலை, உபா சட்டம்! பட்டியல் போட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு குழு! முக்கிய மீட்டிங்! என்னாச்சு
டெல்லி: இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புக் குழு, முக்கிய தலைவர்கள் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதியாக உள்ளவர் ஈமான் கில்மோர். இப்போது இந்தியா வந்துள்ள இவர் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பயங்கரவாத தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ராவை அவர் நேற்று சந்தித்தார். அப்போது காஷ்மீரில் இருக்கும் நிலை குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.
மேக் இன் இந்தியா - ஹேட் இன் இந்தியா ஒன்றாக இருக்க முடியாது! பட்டியலிட்டு மோடியை விளாசும் ராகுல்
ஐரோப்பிய ஒன்றியம்
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி எமன் கில்மோர் இந்திய அரசின் பிரதிநிதிகள் உடனான தனது சந்திப்புகளில் தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நாட்டில் சிறுபான்மையினரின் நிலை, வகுப்புவாத வன்முறை மற்றும் ஜம்மு காஷ்மீர் நிலைமை போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்ததாகக் கூறினார். இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் உகோ அஸ்டுடோ உள்ளிட்டோர் அடங்கிய இந்த ஐரோப்பிய ஒன்றிய குழு சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸை டெல்லியில் சந்தித்தது.
என்ன ஆலோசனை
தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் உடனான சந்திப்பின் போது, வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டம், தடுப்புக்காவல், ஜாமீன், தேச துரோகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் ஆகியவை குறித்தும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை குறித்தும் ஐரோப்பியப் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். இதை எமன் கில்மோர் தனது டிவிட்டர் பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்,
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம்
இது தொடர்பாக மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் மத உரிமைகளும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. ஆனால் பலவந்தமான மற்றும் மோசடியான முறையில் யாரையும் மதமாற்றம் செய்யக் கூடாது. கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவில் எந்தவொரு பெரிய வகுப்புவாதக் கலவரமும் ஏற்படவில்லை. இருந்த போதிலும், பொய்யான தகவல்களைப் பரப்பும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
5 கோடி சிறுபான்மையினர்
பிரதமர் நரேந்திர மோடியையும் இந்தியாவையும் சிலர் தொடர்ந்து "இழிவுபடுத்த" முயல்வதாக அமைச்சர் தூதுக்குழுவிடம் கூறினார். அவர்கள் சில சமயம் இஸ்லாமிய வெறுப்பைத் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள். மோடி அரசு கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது. மத்திய அரசுப் பணிகளில் சிறுபான்மையினரின் பங்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பயங்கரவாதிகள்
அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஐரோப்பாவிலும் பிற நாடுகளிலும் தங்கள் மோசமான வடிவமைப்புகளில் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அவை இந்தியாவில் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்று அமைச்சர் கூறினார். இதற்குக் காரணம் இந்தியாவின் கலாசாரம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றின் வலிமைதான் என்று அவர் கூறினார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.