வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நியாயம் கிடைக்காவிடில் வரலாற்று துரோகம்.. மோடிக்கு மன்மோகன் கடிதம்
டெல்லி: எல்லை பிரச்சனையில தவறான தகவல் அளிக்க வேணடாம், அப்படி செய்வது ராஜதந்திரம் அல்ல என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவுறுத்தியுள்ளார். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வரலாற்று துரோகம் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கடந்த 15ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
சீன ராணுவம் கல்வான் பள்ளத்தாக்கு முழுவதையும் தனக்கு சொந்தம் என்று கூறி அடவாடியாக ஆக்கிரமிப்பு செய்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்த்த போது தான் இருதரப்புக்கும் மோதலாகி மரணங்கள் ஏற்பட்டது.
அவசரமாக வேண்டும்.. ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா.. பின்னணி என்ன?
கடும் விமர்சனம்
இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கிழக்கு லடாக்கில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நியாயம் வேண்டும்
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் லடாக் பிரச்சனையில் தவறான தகவல் அளிப்பது ராஜதந்திரம் அல்ல என்றும், உறுதியான தலைமைக்கு இது அழகு அல்ல என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 15 ,16 ஆம் தேதிகளில் எல்லையில் நடந்த சண்டையில் நம்முடைய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
உயிர் தியாகம்
அவர்கள் நமது தாய் நாட்டிற்காக இறுதி மூச்சு இருக்கும் வரை போராடி உள்ளார்கள். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் உயிர் தியாகமானது வீணாகக்கூடாது. இந்த விஷயத்தில் இந்திய அரசின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக அமையும்.
Recommended Video
உண்மையை அடக்க முடியாது
ராஜதந்திரத்துக்கும், தீர்க்கமான தலைமைக்கும் தவறான தகவல் மாற்று இல்லை என்பதை நாங்கள் அரசுக்கு நினைவூட்டுகிறோம். பொய்யான அறிக்கைகள், வசதியான கூட்டாளிகள் மூலம் உண்மையை அடக்க முடியாது.
வரலாற்று துரோகம்
சீனா கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி தற்போது வரை இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கையும், பாங்காங் ஏரியையும் கைப்பற்ற பல முறை இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளது. அதை நாம் அனுமதிக்கவே கூடாது. சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டியது அவசியமாகும். சீனாவின் தாக்குதலில் எல்லையைக் காக்கும் சண்டையில் தனது உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த கர்னல் பி சந்தோஷ் பாபு, மற்றும் வீரர்கள் உயிர் தியாகத்துக்கு நீதியை உறுதி செய்யவேண்டும் என பிரதமரையும், அரசையும் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு குறைவாக ஏதேனும் செய்வது மக்களின் நம்பிக்கைக்கு வரலாற்று துரோகமாகும்" இவ்வாறு கூறியுள்ளார்.