"வார்த்தை தடை" சர்ச்சையை தொடர்ந்து அடுத்த அதிரடி.. நாடாளுமன்றத்தில் பதாகை, துண்டு பிரசுரத்திற்கு தடை
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் கூட்டத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என சிலவற்றை மக்களவை செயலகம் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் அதாவது வரும் 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இதில் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சியினர் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இப்படியான சூழலில் திடீர் டிவிஸ்டாக மக்களவை செயலகம் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரெளடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் உள்ளிட்ட வார்த்தைகளை குறிப்பிட்டு இவைகளை நாடாளுமன்ற இரு அவைகளிலும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. மீறி பயன்படுத்தினாலும் இந்த வார்த்தைகள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடைமுறைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சபாநாயகர் அனுமதியின்றி அவைக்குள் பதாகைகள், துண்டு பிரசுரங்கள், பத்திரிகை குறிப்புகள் போன்றவற்றை கொண்டு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிட்ட வார்த்தைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், தர்ணா மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துண்டு பிரசுரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக வெளிவந்துள்ள அறிவிப்பானது எதிர்க்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.
கடந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளை கிழித்தெறிந்து தர்ணாவிலும் அவை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். எனவே இதனை கருத்தில் கொண்டே இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஜூலை 18ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்புகள் பெரும் கவனம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications