ஆன்லைன் ரம்மி தடை சட்டம்! நாடாளுமன்றத்தில் கொந்தளித்த டிஆர் பாலு! திமுக எம்பிகள் வெளிநடப்பு!
டெல்லி : நாடாளுமன்ற மக்களவையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் மசோதா குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து இன்று திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட காலமாக அந்த மசோதா கிடப்பில் இருந்த நிலையில், அது தொடர்பான கோரிக்கைகளால் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுத்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அது சட்டமாவது தாமதமாகியுள்ளது.
பாலம் அறுந்து 140 பேர் பலியான மோர்பியில் பாஜக அமோக வெற்றி! எப்படி சாத்தியமானது தெரியுமா?
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்
ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில் தற்போது சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன.
ஆளுநர் ரவி
இதனையடுத்து திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் ஆன்லைன் ரம்மி மசோதா குறித்து விவாதிக்க திமுக உறுப்பினர்கள் முயன்றனர். ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா குறித்து ஆளுநர் ஆர்என் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் இது குறித்து பலமுறை வலியுறுத்தியும் அது குறித்த கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
நாடாளுமன்ற மக்களவை
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த உடனேயே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர்.பாலு பேசினார். மக்களவையில் பேசிய அவர் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை தடுப்பதற்கு தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
வெளிநடப்பு
அதற்கு மாற்றாக சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து பேச வேண்டுமென டிஆர் பாலு கூறினார். ஆனால் இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதை அடுத்து சபாநாயகர் செயலுக்கு கண்டனம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தீவிரம்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டு பல நாட்கள் ஆகி உள்ள நிலையில் அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. இதனால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தலை தூக்கி உள்ளதோடு தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. ஆளுநர் ரவி இதேபோல பல மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள நிலையில் அவருக்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் நாடாளுமன்றத்திலும் ஆளுநர் ரவி மற்றும் ஆன்லைன் ரம்மி தொடர்பான விவாதங்கள் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.