அதிகாலை நேரத்தில் அவ்வளவு வேகத்தில் எங்கே சென்றார் ரிஷப் பந்த்? வெளியான தகவல்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியது. இன்று அதிகாலை வேளையில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றபோது தூக்கக் கலக்கத்தில் சாலை தடுப்பின் மீது கார் மோதி தீ பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏன் அதிகாலையில் அவ்வளவு வேகமாக போனார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநில ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கின் நர்சன் எல்லையில் தனது மெர்சிடிஸ் காரில் அதிகாலை 5.30 மணிக்கு ரிஷப் பண்ட் பயணித்தார். அப்போது டிவைடரில் அவருடைய கார் மோதி தீப்பிடித்துள்ளது. பிறகு பண்ட் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினார்.
அவர் தற்போது ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மேல் சிகிச்சைக்காக டேராடூன் மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அன்று சைரஸ் மிஸ்திரி.. இன்று ரிஷப் பண்ட்..! ரொம்பவே ஆபத்தானதாக மாறும் இந்திய சாலைகள்! என்ன பிரச்சினை
காரில் ரிஷப் பண்ட்
இந்த காரில் ரிஷப் பண்ட் மட்டுமே இருந்துள்ளதால் அவர் காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொண்டு தப்பினார். கார் ஓட்டும் போது தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் பண்ட் தெரிவித்துள்ளதாக மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயம்
இந்த விபத்தில் பண்டின் நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பண்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கார் முற்றிலும் தீயில் சேதமடைந்துவிட்டது. அவர் டெல்லியிலிருந்து உத்தரகண்ட்டிற்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்தது.
முதுகு நெற்றி
அவருக்கு முதுகு, நெற்றியில் காயம் ஏற்பட்ட போதிலும் அவரது நிலை சீராக உள்ளது என்றும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரிஷப் பண்டிற்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்ததை அறிந்த பிசிசிஐ தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் சர்ஜரி
ரிஷப் பண்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இவர் சீட் பெல்ட் அணியாததால் வெளியே குதித்து உயிர் பிழைத்ததாகவும் சொல்லப்படுகிறது. ரிஷப் பண்டிற்கு காயம் ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அவருடைய நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாயுடன் புத்தாண்டை கொண்டாட நினைத்துள்ளார் ரிஷப் பண்ட். இதற்காக தாயிடம் கூட சொல்லாமல் சர்பிரைஸாக சென்ற போது துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளார். இதனால்தான் ரிஷப் அதிகாலை நேரத்தில் அவ்வளவு வேகமாக போனதாக கூறப்படுகிறது.