சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் கைதான டாக்டர்... டெல்லியில் அதிர்ச்சி
டெல்லி: டெல்லியில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷிவ் விகார் பகுதியில் உள்ள மோஹல்லா கிளினிக் மருத்துவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மருத்துவரை கைது செய்தனர்.

பள்ளியில் பாலியல் தொல்லை
சமீப காலமாக பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள், மாணவிகள் தற்கொலை, ஆசிரியர்கள் கைது எனும் செய்திகள் அடிக்கடி வருகின்றன. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இதுமட்டுமின்றி மாணவிகள் தரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கமும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் கோரிக்கை
இதுமட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்றும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மிக அழுத்தமான கோரிக்கையை வைத்துள்ளார்.

டாக்டரிடம் சென்ற சிறுமி
பள்ளிகள் மீது பாலியல் தொல்லை புகார்கள் வந்துகொண்டிருக்க இது தொடர்பான புகார் ஒன்று மருத்துவமனை பக்கம் திரும்பி உள்ளது. அதாவது மருத்துவர்கள் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக டெல்லியில் சிறுமி தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த வியாபாரியின் 12 வயது மகள், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ஷிவ் விகார் பகுதியின் மோஹல்லா கிளினிக் சென்றுள்ளார்.

சிறுமியிடம் சீண்டல்
தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மாத்திரை தருமாறும் கேட்டுள்ளார். பின்னர் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், செக்அப் செய்ய வேண்டும் என தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி அங்கிருந்து ஓடி வந்து டாக்டர் தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

டாக்டர் கைது போக்சோவில் கைது
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மோஹல்லா மருத்தவமனையை முற்றுகையிட்டு டாக்டரிடம் தகராறு செய்தனர். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை தனியாக அழைத்து நடந்தவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டனர். பின்னர் சிறுமிக்கு டாக்டர் பாலியல் தொல்லை நடந்திருப்பதை உறுதி செய்த போலீசார் அந்த மருத்துவர் மீது போக்சோ உள்பட பல வழக்குகள் பதிவு செய்தனர். பின்னர் மருத்துவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே ஆசிரியர்கள் மீது பாலியல் தொல்லை புகார்கள் வரும் நிலையில், தற்போது மருத்தவர் மீதும் இதுபோன்ற புகார் வருவதால் பெற்றோர் பீதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications