மைனஸுக்கு நெருக்கமாக செல்லும் வெப்பநிலை.. டெல்லியில் கடும் குளிர்+பனிமூட்டம்! ரயில் சேவை பாதிப்பு
டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில், இன்று குளிர் அலைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. ஹரியானாவின் ஹெசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸாகவும், பஞ்சாபின் அமிர்தசரசில் 1.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது.

இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு குளிர் அலை தொடரும் என எச்சரித்திருக்கிறது. வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முதல், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் பனிமூட்டம் காரணமாக ரயில மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 18 ரயில்கள் 1 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. குளிர் எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறதோ அதே அளவுக்கு காற்றிர தரமும் மோசமடைந்துள்ளது. காற்றின் தரம் 200ஐ தொட்டால் அது மிகவும் மாசடைந்துள்ளது என்று அர்த்தம். மட்டுமல்லாது இந்த காற்று சுவாசிக்க ஏற்க தக்கதல்ல. ஆனால் டெல்லியில் காற்றின் தரம் 365ஆக பதிவாகியுள்ளது. மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், நியூ மோதி பாக், நொய்டா செக்டாா்-62 உள்ளிட்ட சில இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 என பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications