நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்.. டெல்லி, நொய்டா, குர்கிராமிலும் குலுங்கிய பூமி.. பீதியில் மக்கள்
டெல்லி: நேபாளத்தில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் டெல்லி, நொய்டா, குர்கிராமில் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியாகி உள்ளனர்.
அண்டை நாடான மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. இதில் பலி 2 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தாய்லாந்திலும் உணரப்பட்டது. தாய்லாந்தில் 3 பேர் வரை பலியாகி உள்ளனர்.

மேலும் மியான்மர் நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலத்தில் சில இடங்களில் உணரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை. இப்படியான சூழலில் இன்று திடீரென்று அண்டை நாடான நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள கார்காகோட் பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு 7.52 மணிக்கு நேபாளத்தில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் என்பது பூமிக்கடியில் 20 கிமீ ஆழத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கி உள்ளதோடு, வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சேதம் குறித்த விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. நேபாளத்தை பொறுத்தவரை அங்கு அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்பது நேபாளம் என்பது டெக்டோனிக் ஜோனில் அமைந்துள்ளது. இந்த ஜோனில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதாவது டெக்டோனிக் ஜோன் என்பது நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகள் என்ற பட்டியலில் 4 மற்றும் 5 என்ற பிரிவில் வரும். இதனால் நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் என்பது நம் நாட்டிலும் எதிரொலித்துள்ளது.
அதன்படி டெல்லி, டெல்லியையொட்டி உள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டா, மற்றும் ஹரியானா மாநிலத்தின் குர்கிராம், வடகிழக்கு மாநிலத்தின் சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இதனால் மக்கள் பீதியாகி இருக்கின்றனர். இந்த நிலநடுக்கம் பற்றி தேசிய நிலஅதிர்வு மையம் சார்பில், ‛‛நிலநடுக்கம் என்பது இன்று இரவு 7.52 மணிக்கு ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 20 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications