பொருளாதார மந்த நிலை: சீன இறக்குமதியை குறைக்காவிட்டால் பெரும்பாதிப்பு..மோடிக்கு பறந்த திடீர் கோரிக்கை
டெல்லி: 2023-ம் ஆண்டு உலகளாவிய மந்த நிலை ஏற்படலாம் என்று உலக வங்கி கூறியிருக்கும் நிலையில், சீன இறக்குமதியை குறைக்காவிட்டால் இந்தியாவில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என பிரதமர் மோடிக்கு அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (AITF) கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு சென்றது. பெருந்தொற்று ஓரளவு குறைந்து விட்டதால் பொருளாதாரம் வேகம் எடுக்கத்தொடங்கிய நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், பொருளாதார வளர்ச்சியில் பின்னடவை ஏற்படுத்தியது. இதனால் பணவீக்கம் உயர்ந்தது.
இதை சமாளிக்க பல நாடுகளும் வரி விகிதங்களை அதிகரித்தன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அடுத்த ஆண்டு உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பை நீட்டிக்க வேண்டும்! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம்
பிரதமர் மோடிக்கு கடிதம்
இந்த நிலையில், உலக வங்கி அறிக்கையை குறிப்பிட்டு இந்திய சந்தைகளில் சீன ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (AITF) கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக AITF கூட்டமைப்பின் தலைவர் பதிஷ் ஜிண்டால் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
எதிர்காலம் சவால்மிக்கதாக மாறும்
மந்த நிலையால் சிறு குறுதொழிற்சாலைகள்தான் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். நிறுவனங்கள் அடிக்கடி மூடப்படுவதுடன் திவால் நிலையை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். இறக்குமதியில் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்காவிடில் இந்த மோசமான நிலையை சிறுகுறு நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால், இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலம் சவால்மிக்கதாக மாறும்.
இந்திய சந்தைகளில் சீனாவின் ஏற்றுமதி
சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி 46.14 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது. 2019 ஆம் நிதியாண்டில் சீனாவில் இருந்து செய்யப்பட்ட இறக்குமதியானது 4 லட்சத்து 61 ஆயிரத்து 254 கோடியாக இருந்தது. 2020 ஆம் நிதியாண்டில் இது 4 லட்சத்து 82 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் இந்திய சந்தைகளில் சீனாவின் ஏற்றுமதியானது 7 லட்சத்து 5 ஆயிரத்து 123 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்னும் மோசமாக இருக்கிறது
வரும் 2023 ஆம் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்கள் இதன் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. சீனா இந்த கால கட்டத்தில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 200 கோடி இறக்குமதி செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்திய சந்தைகளில் இறக்குமதி செய்ய சீனா 12 லட்சம் கோடியை ஏற்றுமதி இலக்காக நிர்ணயித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஒட்டு மொத்த இறக்குமதியில் சுமார் 25 சதவிகிதம் ஆகும்.
40 முதல் 80 சதவீத இறக்குமதி பொருட்கள்
இந்த விவரங்கள் அனைத்தும் இறக்குமதி செய்பவர்களிடம் இருந்து சீனா நேரடியாக ஏற்றுமதி செய்துவரும் புள்ளி விவரங்கள் ஆகும். நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலை எதுவும் இல்லாததால் 40 முதல் 80 சதவீத இறக்குமதி பொருட்கள் செலுத்தப்படும் விலையை விட குறைந்த விலைப்பட்டியலில் வந்து விடுகின்றன. அதிக இறக்குமதி வரிகள் அல்லது பொருட்களை கொண்டு குவிப்பதற்கான எதிரான வரிகளை சமாளிக்க சீனா மிகவும் புத்திசாலித்தனமாக இதுபோன்ற பொருட்களை தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ASEAN) வழியாகவும் வளர்ச்சி அடையாத நாடுகள் வழியாகவும் இந்திய சந்தைக்குள் கொண்டு வந்து விடுகின்றன.
நடப்பு நிதியாண்டில்
கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ஆசியான் நாடுகளிடம் இருந்து இந்தியாவின் இறக்குமதி 5 லட்சத்து 7 ஆயிரம் கோடியாக அதிகரிப்பதற்கு இதுவே காரணம். இதில் ஆச்சர்யப்படும் விதமாக நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் இந்த நாடுகள் 3 லட்சத்து 5 ஆயிரத்து 117 கோடிகள் இறக்குமதி செய்துள்ளன. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இந்த நாடுகள் இந்தியாவிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யும் என்று தெளிவாக தெரிகிறது.
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவையா?
சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசிய, மலேசியா போன்ற நாடுகளை பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தை சீனா அழிக்கிறது. எனவே, சர்வதேச மந்த நிலையில் இருந்து இந்தியாவை பாதுகாக்க சீன கம்பெனிகளை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. அதேபோல், ஆசியான் நாடுகள் வழியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவையா? என்பது குறித்தும் இந்தியா விசாரணை நடத்த வேண்டும்.
சிபிஐ மூலம் விசாரணை நடத்தனும்
அனைத்து விதமான பொருட்களுக்கும் குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்திய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைக்கு குறையாமல் இது இருக்க வேண்டும். அதேபோல் இறக்குமதியில் நடைபெறும் under invoicing- முறைகேடுகளை வெளிக்கொண்டு வர சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.