நெருங்கும் தேர்தல்- கர்நாடகா காங். தலைவர் சிவக்குமாரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை!
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரிடம் டெல்லியில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில அரசியலில் பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கர்நாடகாவின் ஆளும் பாஜக அரசு, இந்தி மொழி தினம் கொண்டாடியதை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளம்- ஜேடிஎஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கர்நாடகா சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
2018-ம் ஆண்டு கர்நாடகாவில் சிவக்குமார் உள்ளிட்டோருக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள், கணக்கில் காட்டாத நகைகள், ரூ10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகளும் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். டெல்லி திஹார் சிறையில் பணமோசடி வழக்கில் சிவக்குமார் அடைக்கப்பட்டு 50 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கில் சிவக்குமார் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார் சிவக்குமார். பாஜகவுக்கு எதிராக கர்நாடகாவில் வலிமையான தலைவராக இருப்பவர் சிவக்குமார். கர்நாடகாவின் அரசியலை தீர்மானிக்கும் ஒக்கலிகா கவுடா சமூகத்தில் பெரும் ஆதரவைப் பெற்றவர் இவர். சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸுக்கு சிவக்குமார் கொண்டு சேர்த்துவிடுவார்; இது அந்த கட்சிக்கு பெரும் பலம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் சிவக்குமார் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.