விக்டர் நாம கெத்துதான? ‘முக்கிய பதவி’.. டெல்லியில் பலம் பெறுகிறாரா எடப்பாடி? பாஜகவின் அதிரடி மூவ்!
டெல்லி : எடப்பாடி பழனிசாமி அணியின் தம்பிதுரைக்கு மாநிலங்களவையின் முக்கியமான குழுவில் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி, டெல்லியின் ஆதரவை தம் பக்கம் இழுத்திருப்பதாக உற்சாகமாகிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் பாஜக தலைமையின் ஒவ்வொரு நகர்வுகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி பாஜக தலைமை யாருக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே, அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பலம் அளவிடப்படுகிறது. பாஜகவின் கண் சிமிட்டலைப் பொறுத்தே ஆதரவாளர்கள் அணி மாறுவதும் நடப்பதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்.பிக்கு, நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஈபிஎஸ் தரப்பின் தம்பிதுரைக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பிளவு
கடந்த ஜூன் மாதம், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பினரே முன்னெடுத்தனர். ஓபிஎஸ் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்று கூறி வந்தாலும், அதைத் திட்டவட்டமாக மறுத்த எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமை என்பதில் உறுதியாக இருந்தார். பின்னர் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்தும் நீக்கினார். அதேபோல, ஓபிஎஸ்ஸும், எடப்பாடி அணியினரை கட்சியை விட்டு நீக்கினார்.

பாஜக விருப்பம்
தொடர்ந்து, இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் பல கட்ட விசாரணைகள், உத்தரவுகளுக்குப் பிறகு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே, பாஜக தலைமையை நோக்கி காய்நகர்த்தி வருகின்றனர். பாஜக தலைமையின் ஆதரவு கிடைப்பவரே அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துவர் என்ற நிலையே இருக்கிறது. பாஜகவின் விருப்பம், ஓபிஎஸ் சொல்வது போல இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனக் கூறப்படுகிறது.

டெல்லியின் திசை
ஓபிஎஸ்- எடப்பாடி என இருவருமே, பாஜகவின் முழுமையான ஆதரவை தங்கள் பக்கம் திருப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், தங்கள் ஆதரவு யாருக்கு என்பதில், டெல்லி இன்னும் திட்டவட்டமாக திசையைக் காட்டவில்லை. இதனால், பாஜக தலைமையின் நகர்வுகள் ஒவ்வொன்றுமே உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யார் பக்கம் டெல்லி பாஜகவின் காற்று அடிக்கிறது என்பதை அரசியல் நோக்கர்கள் கவனித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் அணி எம்.பிக்கு பதவி
இந்த நிலையில் தான் சமீபத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர் மத்திய அரசின் முக்கிய குழு ஒன்றில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் உள்ள தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக எம்.பி ஆர்.தர்மருக்கு வழங்கப்பட்டது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு அணிகளும் தனித்து இயங்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளருக்கு நாடாளுமன்றக் குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈபிஎஸ் அணி எம்.பிக்கு பதவி
ஓபிஎஸ் அணி எம்.பிக்கு பதவி கொடுத்த பாஜக, ஈபிஎஸ் அணியைக் கைவிட்டுவிட்டது என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், குழுத் தலைவர் பதவி அதிமுக எம்.பி தம்பிதுரைக்கு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் தம்பிதுரை, மாநிலங்களவை அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழு தலைவராக தம்பிதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

1 : 1 - ஈக்குவல்
தர்மரை குழு உறுப்பினராக நியமித்ததால், டெல்லியில் ஓபிஎஸ் தரப்பின் கை ஓங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஈபிஎஸ் அணியின் தம்பிதுரை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைச் சுட்டிக்காட்டி, டெல்லி பாஜக தலைமை எங்கள் பக்கம் தான் என்கிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர். அதேசமயம், ஈபிஎஸ்ஸை கருத்தில் கொண்டெல்லாம் பாஜக தலைமை தம்பிதுரைக்கு இந்தப் பதவியைக் கொடுக்கவில்லை, அவர் தனிப்பட்ட முறையில் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியதால் தான் இந்தப் பதவி கிடைத்திருக்கிறது என பற்ற வைக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.












Click it and Unblock the Notifications