எலக்ட்ரிக் வாகனத்திற்கு அள்ளி தருவோம்.. சுத்தி, சுத்தி நிர்மலா சீதாராமன் சொன்னது இதுதான்!
Recommended Video
டெல்லி: மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திரும்ப திரும்ப சொல்ல வந்தது ஒன்றுதான். மக்களே.. நீங்கல்லாம் இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும். அதுதான் உங்களுக்கும், நாட்டுக்கும் ரொம்ப நல்லது என்பதே அந்த தகவல்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணை இறக்குமதியை குறைப்பது ஆகிய இரு முக்கியமான விஷயங்களுக்காக, எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சில தினங்கள் முன்பாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதேபோலத்தான், பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனும் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
வரி குறைப்பு
பராமரிப்பு, கூடுதல் செலவு, சார்ஜ் போட போதிய கட்டமைப்பு இல்லாதது போன்றவற்றால், எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை நமது நாட்டில் குறைவு. எனவே, அந்த பிரச்சினையை சரி செய்ய நிதி அமைச்சர் தனது முதல் பட்ஜெட்டில் முயற்சி செய்துள்ளார். எலக்ட்ரிக் வாகனங்கள் மீது 12 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க வழிவகை செய்யப்படும் என்று, நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால், எலக்ட்ரிக் வாகனங்கள் விலை என்பது ஓரளவுக்கு குறையும்.
வருமான வரி சலுகை
இதுதவிர மற்றொரு சலுகையையும், எலக்ட்ரிக் வாகனங்களுக்காகவே அறிவித்தார் நிதி அமைச்சர். அதாவது கடன் மூலம், எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினால், அந்த கடன் மீதான ரூ.1.50 லட்சம் வரையிலான வட்டிக்கு, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதே அவர் அறிவிப்பு. இதுவும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு ஊக்கம் கொடுக்கும் செயல்தான். வங்கிக் கடனையும் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு இது.
நிலைமை மாறும்
உடனடியாக, இந்த அறிவிப்புகளுக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால், அடுத்த 5-10 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் சூழல் அமைப்பை நிச்சயமாக எலக்ட்ரிக் வாகனங்கள்தான் மாற்றியமைக்கும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு பக்கம் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு தலா ரூ.1 செஸ் வரி விதித்துள்ளார் நிதி அமைச்சர். இதன் மூலம், எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி கவனத்தை வையுங்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் அவர்.
10,000 கோடி ஒதுக்கீடு
தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை நோக்கி இந்தியாவை நகர்த்த மின்சார வாகன உற்பத்திக்கான மையமாக இந்த நாட்டை மாற்றும் முயற்சிக்காக, பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ரூ .10,000 கோடியை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.