2021 இறுதிக்குள்.. இந்தியாவில் எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி- உச்சநீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு
டெல்லி: 2021 இறுதிக்குள் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு, மத்திய அரசின் கொரோனா வேக்சின் கொள்கை தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார். ஃபைசர் போன்ற நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், அது வெற்றியடைந்தால், தடுப்பூசி முடிப்பதற்கான காலக்கெடு மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி.. இணையதளம் இல்லாத கிராம மக்களை பற்றி மத்திய அரசு யோசித்ததா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
வெவ்வேறு வயதினருக்கான தடுப்பூசி விநியோகத்தில் முரண்பாடு இருப்பது உள்ளிட்ட சில சிக்கல்கள்தான் தடுப்பூசி பணிகளை வேகமாக செயல்படுத்த முடியாததன் காரணம் என்று, துஷார் மேத்தா தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பு இவ்வாறு கூறினாலும், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. எனவே 2021 இறுதிக்குள் எப்படி எல்லோருக்கும் தடுப்பூசி போடப்படும் என்ற கேள்விகள் எழுகின்றன. ஃபைசர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசி நிறுவனங்களும் ஏற்கனவே தங்களது உற்பத்தியை வழங்குவதாக ஒப்பந்தம் போட்டுள்ளதால், புதிதாக அதிகப்படியாக இந்தியாவுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.