மோடிக்கு எதிராக வேட்புமனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக மனுதாக்கல் செய்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார். இதற்காக இரண்டு வாரம் முன் பிரம்மாண்டமாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக அஜய் ராய் போட்டியிடுகிறார். அங்கு சமாஜ் வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் இரண்டு வாரம் முன்தான் அறிவிக்கப்பட்டார். சமாஜ்வாதி சார்பாக ஷாலினி யாதவ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. சமாஜ்வாதி சார்பாக ஷாலினி யாதவ் வேட்புமனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன்பின் இந்திய முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்தார். தேஜ் பகதூர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர், அங்கு வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் அளித்தார்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு மிக மோசமான உணவு அளிக்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டார். இவர் வெளியிட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலானது. இதையடுத்து தேஜ் பகதூர் இந்திய ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இவர் மோடிக்கு எதிராக வேட்புமனுத்தாக்கல் செய்தார். இவர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி சார்பாக சமாஜ் வாதி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இவரின் வேட்புமனு கடைசியில் ஏற்றுகொள்ளப்படவில்லை. தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர்கள் ஐந்து வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட கூடாது என்று கூறி தேர்தல் ஆணையம் அவரின் மனுவை நிராகரித்து இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தேஜ் பகதூர் வழக்கு தொடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார். நான் கொடுத்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. அதனால் என்னுடைய மனுவை ஏற்கவேண்டும் என்று தேஜ் பகதூர் வழக்கு தொடுத்து இருக்கிறார். இவர் தொடுத்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications