'தீயாக பரவும் வெறுப்பு பேச்சு.. உங்கள் வருமானம் அதிகரிக்கிறது..' பேஸ்புக் மீது பாய்ந்த விசாரணை குழு
டெல்லி: வெறுப்பு பேச்சு தொடர்பான பதிவுகள் தங்கள் தளத்தில் இருப்பதை விரும்பவில்லை என பேஸ்புக் அதிகாரிகள் டெல்லி விசாரணைக் குழுவிடம் தெரிவித்தனர். இருப்பினும், இதை ஏற்றுக்கொள்ளாத விசாரணைக் குழு, வெறுப்பு பேச்சு வைரல் ஆகி வருவாய் அதிகரிப்பதால் உண்மையிலேயே பேஸ்புக் நிறுவனத்திற்கு இதில் அக்கறை உள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளதாக சாடினர்.
தலைநகர் டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பல இடங்களில் வன்முறை பரவியதால் தலைநகரில் அமைதியற்ற சூழல் உருவானது. சில இடங்களில் மசூதிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட்... 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை - சூறாவளியும் வீசும்
விசாரணை
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்ட வெறுப்பு பேச்சுகள் காரணமாகவே டெல்லியில் கலவரம் ஏற்பட்டதாகவும் இந்த வெறுப்பு பேச்சுகளைத் தடுக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்கக் குழுவின் விசாரணையில் பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆஜரானார்கள்.
சிறுபான்மையினர்
டெல்லி விதான் சபாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில், வெறுப்பு பேச்சுக்கு எதிராகவும் அதைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஃபேஸ்புக் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டன. மேலும், பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் மதச் சார்பு குறித்தும் அங்கு பணிபுரியும் சிறுபான்மையினர் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
தகவல் இல்லை
இதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் இந்தியாவின் பொதுக் கொள்கை இயக்குநர் ஷிவ்நாத் துக்ரால், "எங்கள் நிறுவனத்தில் 300 பேர் பணிபுரிகிறார்கள். குறிப்பாகக் கொள்கைக் குழுவில் சுமார் 20 பேர் உள்ளனர். அதில் எத்தனை பேர் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. ஏனென்றால், இந்த தகவல்களைச் சேகரிக்க இந்தியச் சட்டம் எங்களை அனுமதிப்பதில்லை" என்றார். இதையடுத்து அடுத்த விசாரணையில் கொள்கை குழுவில் உள்ள மத சிறுபான்மையினர் குறித்த தகவல்களை அளிக்குமாறு விசாரணைக் குழு தலைவர் ராகவ் சதா உத்தரவிட்டார்.
வெறுப்பு பேச்சு
டெல்லி கலவரத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பும் 2 மாதங்களுக்குப் பின்னும் வெறுப்பு பேச்சு தொடர்பாகப் பெறப்பட்ட அனைத்து புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி விசாரணைக் குழு கேட்டுக் கொண்டது. அப்போது பேஸ்புக் அதிகாரிகள், "வெறுப்பு பேச்சு நம்மைக் காயப்படுத்துகிறது. எங்கள் தளத்தில் வெறுப்பு பேச்சு இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் விளம்பரதாரர்களும் விரும்பவில்லை. இதைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தது.
வெறுப்பு பேச்சால் வருவாய்
இதற்குப் பதிலளித்த ராகவ் சதா, "நீங்கள் இதை ஒரு வியாபாரமாகச் செய்வதால் வெறுப்பு பேச்சு உண்மையில் உங்களைக் காயப்படுத்துகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் வெறுப்பு பேச்சுகள் வைரல் ஆவதால் அதன் மூலம் உங்களுக்கான வருவாய் அதிகரிக்கவே செய்கிறது" என்றார். மேலும், இந்தியாவில் வெறுப்பு பேச்சு என்றால் என்ன என்பதை பேஸ்புக் நிறுவனம் வரையறுத்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மழுப்பிய பேஸ்புக்
இந்த கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காத ஷிவ்நாத் துக்ரால், "பேச்சு சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்கும் இடையே ஒரு சமநிலை வேண்டும். எங்கள் தரவுகளின் அடிப்படையில் வெறுப்புப் பேச்சுகளில் சாதியைச் சேர்த்துள்ளோம்" என்றார். பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தியாவிற்கு எனத் தனியாக வெறுப்பு பேச்சு கொள்கை உள்ளதா என்ற கேள்விக்கு, அந்நிறுவன அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஐந்து பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஷிவ்நாத் துக்ரால், கொரோனா காலகட்டத்தில் பரவிய போலி செய்திகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
எடுக்கப்படும் நடவடிக்கை
பெறப்படும் புகார்கள் மீது எவ்வளவு வேகமாக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்கிறது என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "24 மணி நேரத்திற்குள் புகார்கள் மீது நடவடிக்கை தொடங்கும். எங்கள் கொள்கையை அது மீறும் வகையில் இருந்தால் உடனடியாக தளத்திலிருந்து அகற்றப்படும்" என்று பதிலளித்தார். டெல்லி கலவரத்தின் போது நீக்கப்பட்ட பதிவுகள் குறித்த தரவுகளை டெல்லி விசாரணைக் குழு கேட்டது. இருப்பினும், இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி விவரங்களைப் பகிர பேஸ்புக் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
விசாரணைக் குழு அதிருப்தி
மேலும் கூறுகையில், "நாங்கள் பிரச்சினைக்குரிய போஸ்ட்களை அகற்றுவோம். அதேநேரம் அப்படி கருத்தைப் பதிவிட்ட நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எங்களால் எடுக்க முடியாது. இது தொடர்பாக யார் மீதும் இதுவரை நாங்கள் புகார் அளித்ததில்லை" என்று தெரிவித்தார். மேலும், டெல்லி கலவரத்தின் போது பிரச்சினைக்குரிய பதிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஷிவ்நாத் துக்ரால், "வெறுப்பு பேச்சுக்கு எதிரான நடவடிக்கை என்பது தொடர்ச்சியான ஒன்று அது எங்கும் முடிவடையாது. ஒரு பதிவுக்கு மற்ற பயனாளிகள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து எங்கள் அல்காரிதம் வெறுப்பு பேச்சைக் கண்டறியும்" என்று தெரிவித்தார். ஃபேஸ்புக்கின் பதிலில் அதிருப்தி அடைந்த சத்தா, "கேள்விகளைத் திசை திரும்பி ஏமாற்றுகிறீர்கள்" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.