1990 முதல் 2020மாவது வருடத்திற்குள் வேலை பார்த்தவர்கள் அரசிடம் ரூ.1.20 லட்சம் பெறலாமா? உண்மை இதுதான்
டெல்லி: கடந்த 30 வருட காலத்திற்குள் ஏதாவது ஒரு பணியிலுள்ள தொழிலாளர்களுக்கு அரசு ரூ.1.20 லட்சம், நிதி உதவி வழங்கும் என்று, ஒரு மெசேஜ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. இந்த மெசேஜை நம்பாதீர்கள் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உங்களுக்கு கூட இதுபோன்ற மெசேஜ் வந்திருந்தால் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவும். யாருக்கும் ஃபார்வேர்ட் செய்துவிடாதீர்கள்.

1990 முதல் 2020ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திலிருந்து ரூ .1.20 லட்சம் பெற உரிமை உண்டு என்று அந்த போலி செய்தி கூறுகிறது. அந்த தகவலுடன் ஒரு URL உள்ளது, பயனர்கள் தங்கள் பெயர்கள் பட்டியலில் இருக்கிறதா என்று சோதிக்க அதைக் கிளிக் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது அந்த மெசேஜ்.
இது ஒரு போலி செய்தி. அத்தகைய அறிவிப்பு எதுவும் அரசால் வெளியிடப்படவில்லை. எனவே, தயவுசெய்து அத்தகைய URLகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி பேக்கேஜ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்த துறைக்கு எவ்வளவு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். நேற்று, இன்று என அவர் வரிசையாக செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். மற்றபடி, மேலே குறிப்பிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதை போல, தனி நபர்கள், தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications