ஈரோடு கிழக்கில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையத்தில் சி.வி. சண்முகம் பகீர் புகார்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகார் அளித்துள்ளது.
டெல்லி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக பல்வேறு முறைகேடுகளை செய்து வெற்றி பெற முயற்சி செய்வதாக தலைமைத் தேர்தலை ஆணையரை சந்தித்து அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகார் அளித்துள்ளது. இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்காமல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் தான் இரட்டை இலை சின்னத்தை முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கில் குவியும் பணம்..தேர்தல் ஆணையத்தில் குமுறிய பாஜக, அதிமுக.. மத்திய பாதுகாப்பு படை வருகை
இந்த நிலையில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சி.வி. சண்முகம் புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து மத்திய பாதுகாப்பு படை துணையுடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், இடைத்தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் இருக்கும் போது அவசரம் அவசரமாக தேர்தலை நடத்துவது ஏன். வாக்காளர் பட்டியலில் உள்ள பல பேர் அந்த தொகுதியிலேயே இல்லை. 5 ஆயிரம் வாக்காளர்கள் உயிரிழந்து விட்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளன. இது எல்லாமே அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியும்.
ஆளும் திமுக அரசு சொல்வதைத்தான் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேர்மையாக தேர்தல் நடைபெறாது. குண்டர்களை வைத்து இல்லாத வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்ய முயற்சி செய்வார்கள். நேர்மையாக தேர்தல் நடைபெற ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும். காவல்துறையினர் இல்லாமல் மத்திய பாதுகாப்பு படையினர் துணையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து சி.வி. சண்முகம் புகார் அளித்த அதே நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையுடன் நடைபெறும் என்று கூறியுள்ளார்.