நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்... பல இடங்களில் ரயில் சேவை நிறுத்தி வைப்பு!
டெல்லி:வேளாண் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
விவசாயிகள் போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

டெல்லியில் தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

திசைமாறிய டிராக்டர் பேரணி
இதற்கிடையே குடியரசு தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி திசைமாறி வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கூட்டத்தில் விஷமிகள் புகுந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் டெல்லி செங்கோட்டையை சென்று அங்கு காலிஸ்தான் கொடிகளை ஏற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகின.

அடுத்தக்கட்டத்துக்கு நகர்வு
ஆனாலும் பெரும்பாலான விவசாய சங்கங்கள் டெல்லியின் சிங்கு, திகிரி உள்ளிட்ட பல்வேறு எல்லைகளில் தொடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரையில் ஓயப்போவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் இந்த போராட்டத்தை தீவிரமாக அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் முடிவு செய்தனர்.

நாடு முழுவதும் ரயில் மறியல்
அதன்படி நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த நிலையில் திட்டமிடப்பட்டபடி இன்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. பீகார், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாரஷ்டிரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில ரயில் நிலையங்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் அமர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹரியானா , பஞ்சாப்
ஹரியானாவில் சோனிபட், அம்பாலா மற்றும் ஜிந்த் ஆகிய ரயில் நிலையங்களில் பலர் திரண்டனர். பஞ்சாபில் டெல்லி-லூதியானா-அமிர்தசரஸ் ரயில் பாதையில் விவசாயிகள் அமர்ந்திருந்தனர். ஜலந்தர் மற்றும் மொஹாலி மாவட்டத்தில் உள்ள ஜலந்தர் கான்ட்-ஜம்மு ரயில் பாதையை விவசாயிகள் தடுத்தனர்.

மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்
மறியலில் ஈடுபட்டவர்கள் வேளாண் சட்டதை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். பல இடங்களில் தண்டவளாங்களில் அமர்ந்து இருந்த விவசாயிகளை போலீசார் அப்புறபடுத்தினார்கள். சிலர் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியின் திக்ரி பார்டர், பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா, பகதூர்கர் சிட்டி, மற்றும் பிரிகே ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

பலத்த பாதுகாப்பு
இந்த போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. ஆனாலும் சில இடங்களில் ரயில்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தால் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் கூடுதல் போலீசார், பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்தனர்.












Click it and Unblock the Notifications