தென்னிந்தியாவிற்கு குறி.. பெங்களூரில் மாபெரும் விவசாய போராட்டத்தை நடத்த திட்டம்.. டிராக்டர் பேரணி!
டெல்லி: டெல்லி எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி வந்துள்ளனர்.
சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் இவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்து வரும் இந்த விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நீண்ட போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தில் நேற்று நடந்த மகாபஞ்சாயத்து கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டன. அதன்படி டெல்லி மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தில் விவசாயிகள் உள்ளனர். இதுகுறித்து பேசிய விவசாய போராட்ட குழு தலைவர் ராகேஷ் திகாய்த்.. இந்த போராட்டத்தை கைவிட கூடாது.. 3 சட்டங்களை நீக்கும் வரை இதை தொடர வேண்டும். இதை தென் இந்தியாவில் விரிவுபடுத்த வேண்டும்.
முக்கியமாக கர்நாடகா விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அவர்கள் டிராக்டரில் தங்கள் கிராமங்களில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும். பெங்களூரை இன்னொரு டெல்லியாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
பெங்களூர் எல்லையை சுற்றி போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் .. டிராக்டர் பேரணி மேற்கொள்ள வேண்டும் என்று ராகேஷ் கூறியுள்ளார். கர்நாடக விவசாயிகள் முன் பேசும் போது இவர் இப்படி குறிப்பிட்டார்.
இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களுக்கு இந்த போராட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தில் விவசாயிகள் சங்கம் உள்ளது. விரைவில் பெங்களூரில் விவசாயிகள் போராட்டம் வெடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.