தீர்வு இல்லையெனில் 6 மாசமானாலும் சரி.. இங்கேயே இருப்போம்.. குளிரெல்லாம் பிரச்சினையில்லை.. விவசாயிகள்
டெல்லி: விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் 6 மாதமானாலும் இங்கேயே இருப்போம். குளிர் எல்லாம் எங்களுக்கு பிரச்சினையில்லை என விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி இன்று 11-ஆவது நாளாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இவர் கடுங்குளிரையும் கண்டு கொள்ளாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் டிராக்டரில் திரண்டு டெல்லியை நோக்கி படையெடுத்தார்கள். ஆனால் அவர்கள் டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
கேல் ரத்னா விருதை திருப்பி கொடுக்க போறேன்.... மத்திய அரசை எச்சரிக்கும் குத்துச்சண்டை வீரர்!
நாடு தழுவிய பந்த்
இதுவரை 5 கட்டங்களாக மத்திய அரசுடன் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். ஆனால் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே நாளை மறுநாள் 8-ஆம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
மதுக்கரை
வேளாண் சட்டங்களில் திருத்தம் எல்லாம் தேவையில்லை. அந்த சட்டங்களையே ரத்து செய்ய வேண்டும். இதுஒன்றுதான் எங்களுக்கு தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள். இதுகுறித்து பஞ்சாப் விவசாயி ஒருவர் கூறுகையில் தமிழகத்தின் மதுக்கரையில்தான் நான் பிறந்து வளர்ந்தேன்.
கோரிக்கை
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தாத்தா, அப்பாவுடன் விவசாயம் செய்து வருகிறேன். குடும்பமே விவசாய குடும்பம் தான். குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அரசு ஒப்பு கொண்டார்கள். ஆனால் அது மட்டுமே போதாது. அனைத்து வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
வீடு திரும்ப மாட்டோம்
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தொடர்ந்து விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 9ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வீடு திரும்ப மாட்டோம். 6 மாசமானாலும் சரி இங்கேயே இருப்போம். சாப்பாடு தயார் செய்து சாப்பிடுகிறோம், வேறு என்ன வேண்டும், குளிரெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றார் அந்த விவசாயி.