தேதியை குறியுங்கள்.. பேச்சுவார்த்தை நடத்த தயார்.. பிரதமரின் அழைப்பிற்கு விவசாயிகள் சங்கங்கள் பதில்
டெல்லி: விவசாய சட்டங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குப் பிரதமர் மோடி அழைப்புவிடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அறிவிக்கும் நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கடும் குளிர் உட்பட பல்வேறு காரணங்களால் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித உன்பாடும் ஏற்படவில்லை. அதிலும் குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பின், பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்த தயார்
சமீபத்தில் மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் இதற்குப் பதிலளித்த விவசாயச் சங்க தலைவர்களில் ஒருவரான சிவ்குமார் கக்கா, "நாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று எப்போதும் கூறியது இல்லை. அவர்கள் எப்போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளோம். அரசு தேதியையும் நேரத்தையும் அறிவித்தால் பேச்சுவார்த்தை நடத்த இப்போதும் தயார்" என்று கூறினார்.
உடன்பாடு இல்லை
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடைய இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட ரீதியான பாதுகாப்பு ஆகியவற்றில் இதுவரை இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விவசாய சட்டங்களை 18 மாதங்கள் வரை நிறுத்தி வைக்கத் தாயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
பிரதமர் பேச்சு
இந்நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், "குறைந்தபட்ச ஆதரவு விலை எப்போதும் தொடரும். இந்த விவசாய சட்டங்கள் மண்டிகளை நவீனப்படுத்தும். போராடுபவர்களிடம் நான் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறோன். போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை என்றாலும், வயதானவர்களுடன் அங்குப் போராட்டம் நடத்தும் விதம் சரியல்ல. போராட்டத்தை அவர்கள் கைவிட வேண்டும். இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலம் நான் அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கிறேன்" என்றார். மேலும், போராட்டத்தில் சிலர் புகுந்து கைப்பற்ற முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினர்.
உரிமை உள்ளது
தவறான சட்டங்களை அரசு எடுத்து வரும்போது அதை எதிர்த்துப் போராடும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் விவசாயச் சங்கங்கள் தெரிவித்தன. மேலும், நாட்டிலுள்ள மக்களுக்கு உணவுதான் முக்கியமே தவிர தொழில் அல்ல என்றும் இதனால் விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.