பட்ஜெட் 2021... பழைய வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை... அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய அரசின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்தப் பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். 20 ஆண்டுகள் பழமையான தனிநபர் வாகனங்களுக்கும் 15 ஆண்டுகள் பழமையான வணிக வாகனங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் துறையினர் நீண்ட காலமாக இந்தக் கொள்கையை எதிர்நோக்கியிருந்தனர். இந்தக் கொள்கையின் கீழ் 15 மற்றும் 20 ஆண்டுகள் பழைய வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும் என்பதால், புதிய வாகனங்களுக்கான தேவை உயரும்.
இதன் காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னரே, கடும் நெருக்கடியைச் சந்தித்து வந்த ஆட்டோமொபைல் துறைக்கு நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.