கிராமத்தில் ஸ்டேடியம் இல்லை.. மகன் பயிற்சி பெற தினமும் 16 கி.மீ பயணம் செய்வான்..நீரஜ் தந்தை உருக்கம்
டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதி சுற்று போட்டியில் தங்கம் வென்று இத்தியாவின் தங்க தாகத்தை தணித்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் வாங்கி கொடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
Recommended Video
நீரஜ் சோப்ராவின் வெற்றியை ஒட்டுமொத்த இந்திய தேசமே கொண்டாடி வருகிறது. ஹரியாணா மாநிலம் பானிபட்டில் உள்ள நீரஜ் சோப்ரா சொந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். நீரஜ் சோப்ரா வீட்டின் முன் தேசியக் கொடியுடன் மக்கள் கொண்டாடினார்கள்.

பெற்றோர்கள் மகிழ்ச்சி
நீரஜ் சோப்ரா தங்கம் வாங்கியதால் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகன் தங்கம் வாங்கியதால் நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ்குமார் ஆனந்த கண்ணீர் வடித்தார். தனது மகன் சாதனை படைத்தது குறித்து அவர் கூறியதாவது:- "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமது தேசம் ஒரு பதக்கத்தை வென்றுள்ளது, அதுவும் தங்கம்.

தேசத்தின் ஆசீர்வாதம்
நாங்கள் தங்கத்தை வென்றது நமது தேசத்தின் ஆசீர்வாதம் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் மகன் ஈட்டிப் எறிதல் போட்டியில் பதக்கம் பெற்று தடகளத்தில் ஒலிம்பிக் தங்கத்துக்கான இந்தியாவின் நீண்டகால காத்திருப்பை முடித்து வைத்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ்குமார் கூறினார்.

உள்கட்டமைப்பு இல்லை
தனது கிராமத்தில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு இல்லாததால் தனது மகன் நீரஜ் சோப்ரா எதிர்கொண்ட ஆரம்பகால போராட்டங்களை சதீஷ்குமார் உருக்கமுடன் விளக்கினார். ''எங்கள் கிராமத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், ஸ்டேடியங்கள் இல்லை. இதனால் நீரஜ் பயிற்சி பெற தினமும் 15-16 கிமீ பயணம் செய்ய வேண்டியிருந்தது.

நம்பிக்கை வைத்தோம்
ரியோ ஒலிம்பிக்கிற்கு கூட நீரஜ் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவனால் வைல்ட்கார்ட் நுழைவு பெற முடியவில்லை. ஆனால் இந்த முறை அவன் பயிற்சி பெற்றதை வைத்து நீரஜ் பதக்கம் வெல்வான் என்று உறுதியாக இருந்தோம். நாங்கள் நினைத்தபடியே நீரஜ் சோப்ரா தங்கம் வென்று எங்களை பெருமைப்படுத்தி இருக்கிறான்'' என்று நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications