ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகளுக்கு மத்திய அரசு விளம்பரங்கள் நிறுத்தம்?
- ஆர்.மணி
சென்னை இந்தியாவின் சில முன்னணி ஆங்கில பத்திரிகைகள் மற்றும் சில ஆங்கில செய்தி சேனல்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மத்திய அரசு விளம்பரங்கள் அடியோடு நிறுத்தப் பட்டிருக்கின்றன.
சென்னையிலிருந்து வெளி வரும் 'தி ஹிந்து’, மும்பையை மையமாக கொண்டு வெளிவரும் 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 'எகனாமிக் டைம்ஸ்’, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் 'தி டெலிகிராஃப்’ ஆகிய இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ்கள்தான் இவை.
இது தவிர 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்துக்கு சொந்தமான 'டைம்ஸ் நவ்’ மற்றும் 'மிரர் நவ்’ ஆகிய ஆங்கில செய்தி சேனல்களுக்கான மத்திய அரசு விளம்பரங்களும் நிறுத்தப் பட்டு விட்டன. இதில் 'தி ஹிந்து’ வுக்கு கொடுக்கப் பட்டு வந்த மத்திய அரசு விளம்பரங்கள் தேர்தல்களுக்கு முன்பே, அதாவது கடந்த மார்ச் மாதமே நிறுத்தப் பட்டு விட்டன. மற்றவர்களுக்கான விளம்பரங்கள் மோடி அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர் நிறுத்திப் பட்டிருக்கின்றன.
இந்த தகவல்களை சர்வதேச அளவில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் செய்தி நிறுவனமான 'ராய்டர்ஸ்’ (Reuters) வெளியிட்டிருக்கிறது. 'ராய்டர்ஸ்’ நிறுவனத்தின் இந்த செய்தியை மேற்கோள் காட்டி 'தி ஒயர்’ (thewire.in) விரிவான கட்டுரையை பிரசுரித்திருக்கிறது. (https://thewire.in/media/modi-govt-freezes-ads-times-of-india-hindu-the-telegraph)
இதற்கான காரணம் நடந்து முடிந்த தேர்தல்களின் போது பாஜக வுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் மேலே சொல்லப்பட்ட ஊடக நிறுவனங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டதுதான் என்று பாதிக்கப்பட்ட ஒரு செய்தி தாளின் பெயர் கூற விரும்பாத உயர் அதிகாரி ஒருவரும், நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் அதிர் ரஞ்சன் சவுத்திரியும் பேசியிருக்கின்றனர்.
“இந்த மூன்று முன்னணி ஆங்கில நாளிதழ்களையும் மத்திய அரசு தன் முன் மண்டியிட வைக்க முயற்சிக்கிறது. இந்த ஜனநாயக விரோத அணுகுமுறையின் மூலம் மற்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு ஒரு செய்தியை தெரிவிக்கின்றது. அது என்னவென்றால், தங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்பதுதான்’ என்று அதிர் ரஞ்சன் சவுத்திரி நாடாளுமன்ற மக்களவையில் பேசியிருக்கிறார்.
’தி ஹிந்து’, 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 'தி டெலிகிராஃப்’ மற்றும் 'தி எகனாமிக் டைம்ஸ்’ ஆகிய நான்கு முன்னணி ஆங்கில நாளிதழ்களை மாதந்தோறும் 2 கோடியே 60 லட்சம் வாசகர்கள் படிக்கின்றனர். ’தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்துக்கு மாதந்தோறும் 15 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன.
’தி ஹிந்து’ நாளிதழுக்கு மாதந்தோறும் 4 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விளம்பரங்கள் கொடுக்கப் பட்டு வந்திருக்கின்றன என்று பிகுரூஸ்.காம் என்ற ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த இணைய தளம் ஊடக வெளியிலும், கார்ப்போரேட் உலகிலும் மோடியின் தீவிர ஆதரவாளர்களால் நடத்தப்படும் இணையதளம் என்று விவரம் அறிந்தவர்களால் நம்ப படுகிறது. (https://www.pgurus.com/modi-government-stops-advertising-in-times-of-india-group-the-hindu-and-telegraph-newspaper/) இதில் முக்கியமான மற்றோர் விஷயம், மேலே சொன்ன நாட்டின் முன்னணி ஊடக நிறுவனங்கள் சார்பிலும் எவரும் அதிகாரபூர்வமாக இந்த செய்தி பற்றி பேச மறுக்கின்றனர். ’தி ஹிந்து’ குழுமத்தின் சார்பில் இது சம்மந்தமாக பெயர் கூற விரும்பாத, அந் நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இந்த கட்டுரையாளரிடம் பேசும் போது இவ்வாறு கூறுகிறார்; “பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கும் விவகாரத்தில் 'தி ஹிந்து’ வில் வெளிவந்த ஆழமான கட்டுரைகள் தான் மத்திய அரசு விளம்பரங்களை நிறுத்துவதற்கு காரணம். 1987 ம் ஆண்டில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசுக்கு எதிராக போஃபர்ஸ் பீரங்கி ஊழல் பற்றி எழுதியபோது கூட எங்களுக்கான மத்திய அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதில்லை”. ஆனால் பாஜக இந்த குற்றச்சாட்டுகளை மூர்த்தண்யமாக மறுக்கின்றது.
“எங்களுடைய அரசுக்கும், பாஜக வுக்கும் எதிராக கடுமையான விமர்சனங்கள் நாள்தோறும் அச்சு ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் இடைவெளியில்லாமல் வந்து கொண்டிருக்கின்றன. இன்று இந்தியாவில் பேச்சுரிமை இருக்கிறது என்பதற்கு இதுவே சரியான உதாரணம். ஊடகங்களின் குரல் வளையை பாஜக நெருக்கி நசுக்குகிறது என்பது முட்டாள்தனமான குற்றச்சாட்டு’ என்கிறார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நளின் கோஹ்லி.
இந்தியாவின் அனைத்து முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், சமூக வளைதங்கள் ஆகியவற்றில் பாஜக மற்றும் மோடி பற்றி வரும் விமர்சனங்களை கண்காணிப்பதற்காக மிகப் பெரியதோர் அலுவலகம் பாஜகா வால் டில்லியில் நடத்தப்படுகின்றது. டில்லியில் முன்பு பாஜக வின் அகில இந்திய தலைமை அலுவலகம் இயங்கி வந்த நம்பர் 11, அசோகா சாலையில் இந்த அலுவலகம் செயற்பட்டு வருகிறது என்று 'தி ஒயர்’ இணையதளத்தில் வந்த ஒரு நீண்ட, விரிவான கட்டுரை தகவல் தெரிவிக்கின்றது. (https://thewire.in/politics/narendra-modi-amit-shah-bjp-india-media)
இந்த அலுவலகத்தில் 200 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். நாள் தோறும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வெளிவரும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பாஜக, மத்திய அரசு, மோடி ஆகியோர் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டுவதுதான் இங்கு பணியாற்றுபவர்களின் வேலை. ட்விட்டரில் பாஜக, மோடிக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றனர். விரைவில் இங்கு பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 200 லிருந்து 500 ஆக உயர்த்தப் படும் என்று இந்த கட்டுரை கூறுகின்றது.