காங்கிரஸால் துன்புறுத்தப்பட்ட அமித்ஷா தான் ஹீரோ.. பிளாஷ்பேக் கூறி புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங்!
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது மத்திய விசாரணை அமைப்புகளால் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா துன்புறுத்தப்பட்டார். ஆனால் அவர் அழுது புலம்பாமல் அமைதியான முறையில் எதிர்கொண்டார். இந்த கசப்பான அனுபவங்களால் அவர் தற்போது ஹீரோவாக உள்ளார் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை உள்பட மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டப்படுவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
ஹிந்தியை திணிக்க முயலும் பாஜக! அமித்ஷா நிகழ்ச்சி பேனரால் மீண்டும் புகையும் கர்நாடகா!கடும் எதிர்ப்பு!
மோடி அரசு மீது தொடர் குற்றச்சாட்டு
சமீபத்தில் நேஷனல் ஹெராட்ல்ட் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சேனியா காந்தி, எம்பி ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். இதற்கும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தினர். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியை அமலாக்கத்துறை மூலம் மத்திய பாஜக அரசு பழிவாங்குகிறது என அவர்கள் கூறி இருந்தனர். காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பிற கட்சி தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கையின்போது ஒவ்வொரு கட்சியும் மத்திய பாஜகவை விமர்சித்து வருகிறது.
பாஜக அரசு விமர்சனம்
இருப்பினும் மத்திய பாஜக அரசு இதனை புறம்தள்ளியுள்ளது. மத்திய விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன. நீதிமன்ற உத்தரவு மற்றும் புகார்கள், ரகசிய கண்காணிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் சிபிஐ, வருமான வரி மற்றும் சிபிஐ அமைப்புகள் செயல்பட்டு வருவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய விசாரணை அமைப்பு மீது குற்றம்சாட்டி செய்த தவறை மறைக்க முயற்சிக்கின்றனர் எனவும் அவர்கள் விமர்சனம் செய்தனர்.
ராஜ்நாத் சிங் பேச்சு
இந்நிலையில் தான் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா துன்புறுத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அமித்ஷா பல்வேறு இடங்களில் ஆற்றிய உரைகள் அடங்கிய புத்தகம் ‛ஷப்டான்ஷ்' வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
துன்புறுத்தப்பட்ட அமித்ஷா
மத்தியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தபோது விசாரணை அமைப்புகளால் அமித்ஷா துன்புறுத்தப்பட்டார். இதுபற்றி அவர் யாரிடமும் கூறவில்லை. விசாரணைக்கு பயப்படாமல் அழுது புலம்பாத அமித்ஷா அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். காங்கிரஸ் கட்சியினர் போன்று போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை.
கசப்பான அனுபவங்கள்
அமித்ஷாவின் அப்போதைய வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபவங்கள் கொண்டது. இறுதியில் உண்மை தெரியவரும் என ஒவ்வொரு சவாலையும் அவர் தாங்கி கொண்டார். இதுதான் அவரை பலப்படுத்தியது. புகழ், இழிவு பற்றி கவலைப்படாமல் தன் கடமையை செய்து வருகிறார். அரசியல்- ஆன்மிகம் ஆகியவற்றின் கலவை என்பது பலரிடமும் மிகவும் சிறிய அளவிலேயே உள்ளது. ஆனால் அமித்ஷாவிடம் அது அதிகமாக உள்ளது.
ஹீரோவாக அமித்ஷா
மேலும் குஜராத் கலவரம் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன், அமித்ஷாவும் குறிவைக்கப்பட்டார். அமித்ஷா சமஸ்கிருத அறிவு மற்றும் இந்துத்துவா தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் உள்ளிட்டவை பற்றி இன்னும் பலருக்கும் தெரியாது. எந்த ஆசையும் இன்றி கட்சியின் பின்னணியில் இருந்து உழைக்கும் ஹீரோவாக அவர் உள்ளார். கட்சியின் பின்னணியில் இருந்து சிறப்பாக செயல்படுகிறார். அரசுக்கும், கட்சிக்கும் அவர் சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார்'' என்றார்.
ராஜ்நாத் சிங் பேச்சுக்கு காரணம் என்ன?
குஜராத் போலீசாரால் கடந்த 2005ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் சொராபுதீனுக்குத் தொடர்பு உள்ளது எனக்கூறி சொராபுதீனையும், அவரது மனைவியையும் போலீசார் கடத்தி வந்து சுட்டு கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சாட்சியாக கருதப்பட்ட துளசி பிரஜாபதியும் 2006ல் சுட்டு கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்றபோது போலீசார் சுடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதுபற்றி சிபிஐ விசாரி்த்தது. குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா பதவி விலகினார். சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. இறுதியில் இந்த வழக்கில் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். இதனை தான் மறைமுகமாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.