அதென்ன பிரதமருக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை.. புகாரளித்த திரிணாமுல்.. முடிவை மாற்றிய சுகாதார துறை
டெல்லி: தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படத்தை நீக்க சுகாதார துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதார ஊழியர்கள் முன்களப் பணியாளர்கள் என மொத்தம் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது நடைபெறுகிறது.

மோடி புகைப்படம்
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் தலைவர் ஒருவரது புகைப்படம் இவ்வாறு இடம் பெறுவது சட்டவிரோதமானது என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் புகார்
இது தொடர்பாக அக்கட்சியின் எம்பி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், "சுகாதார துறை வழங்கும் சான்றிதழ்களில் மோடியின் புகைப்படத்தை வைப்பதன் மூலம், அவர் தனது பதவியையும் அதிகாரங்களையும் தவறாகப் பயன்படுத்துகிறார். இது மட்டுமல்லாமல், சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள் என நமக்காக உழைத்தவர்களின் உழைப்பை அவர் திருடுகிறார்"என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நீக்க உத்தரவு
இதையடுத்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்குமாறு தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 6ஆம் தேதி கேட்டுக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு ஏற்ப தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை அறிவித்துள்ளது,

5 மாநில தேர்தல்
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் மார்ச் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்திற்கு வரும் மார்ச் 27, ஏப்ரல் 1,6 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதிகபட்சமாக மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது












Click it and Unblock the Notifications