டெல்லியில் தகிக்கும் வெயிலால் வீசும் அனல் காற்று... 104 டிகிரி பதிவான வெப்பநிலையால் மக்கள் தவிப்பு
இளவேனிற்காலத்திலேயே தலைநகர் டெல்லியில் வெயில் தகிக்கத் தொடங்கியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச அளவாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
டெல்லி: அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்னே தலைநகர் டெல்லியில் வெயில் தகிக்க ஆரம்பித்து விட்டது. அதிகபட்சமாக அங்கு 104.18 டிகிரி வெப்பம் பதிவானது. வழக்கத்தை விட 8 டிகிரி அளவு வெப்பம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத வகையில் மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்ப அளவாகும்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று கடந்த மாதமே இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. ஏப்ரல் மே மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதத்திலேயே வெயில் பட்டையை கிளப்பி வருகிறது.
தலைநகர் டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், வெயில் அளவை வெளியிட்டது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 104.18 டிகிரி பாரன்ஹீட்டாக அதாவது 40.1 டிகிரி செல்சியஸ் அளவு பதிவாகி இருந்தது. இந்த அளவு, இயல்புநிலையை விட மிக அதிகம் ஆகும்.
ஹோலி பண்டிகை கொண்டாடும் நேரத்தில் வழக்கமாக வெயிலின் தாக்கம் இதமாக இருக்கும். மிதமாக தென்றல் காற்றும் வீசும். இந்த ஆண்டு ஹோலி பண்டிகை நாளில் அக்னியாய் சுட்டெரித்தது வெயில். பல பகுதிகளில் அனல் காற்றும் வீசிசயது.
கடந்த 1945-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி, டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு கடந்த 76 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் டெல்லியில் இவ்வளவு அதிகமான வெயில் பதிவானது இதுவே முதல்முறை என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மண்டல வானிலை மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
டெல்லியின் பாலம் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதத்தில் 47.6 டிகிரி செல்சியஸ் அதாவது 117.68 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது மே 18, 2010 பின்னர் அடித்த அதிகபட்ச வெயிலாகும். இதேபோன்று டெல்லியின் சஃப்தார்ஜுங் பகுதியில் 46.0 டிகிரி செல்சியஸ் வெயில் 114.8 பாரன்ஹீட் பதிவானது. இது கடந்த 18 ஆண்டுகளாக அங்கு காணப்படாத வெயில் ஆகும்.