டெல்லியில் மழை... வெப்பத்தில் இருந்து தப்பிய மக்கள் - ராஜ்நாத் சிங் சென்ற விமானம் அவரசமாக தரையிறக்கம்
கனமழை காரணமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற விமானம் அவசரமாக ஆக்ராவில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: கனமழை காரணமாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற விமானம் அவசரமாக ஆக்ராவில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் ஆக்ராவுக்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியை கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில் கோடை மழை கொட்டித்தீர்த்துள்ளது. வறண்ட பகுதிகளையும் புழுதி படர்ந்த சாலைகளையும் முத்தமிட்டுள்ளது மழைத்துளி.

கனமழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியால் அனல் காற்றில் இருந்து தலைநகர்வாசிகள் தப்பித்துள்ளனர். இடியுடன் பெய்த கனமழையால் வெள்ளிக்கிழமை மாலை 11 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் அவசரமாக ஆக்ராவிற்கு திருப்பி விடப்பட்டது. சில விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவிற்கு திருப்பி விடப்பட்டன.
விமானத் தகவல்களுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு டெல்லி விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
"மோசமான வானிலை காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் விமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று டெல்லி விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் தொடங்கிய மழை, பின்னர் மாலை தாமதமாக வேகத்தை எடுத்தது, தேசிய தலைநகரில் கடுமையான வெப்பத்திலிருந்து மிகவும் தேவையான ஓய்வு அளித்தது.
வறண்ட மற்றும் தூசி நிறைந்த சாலைகளில் மழை பெய்ததால் மக்கள் பலரும் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. வியாழக்கிழமையன்று 43.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில் வெப்பத்திற்கு இதமாக கொட்டித்தீர்த்துள்ளது கோடை மழை.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சனிக்கிழமை இடைவிடாமல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் டெல்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும் ஒரு வாரத்திற்கு வெப்ப அலைகள் இருக்காது என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications