"தாவூத் இப்ராஹிம் vs சோட்டா ராஜன்.." மும்பையில் ஓடிய ரத்த ஆறு! அரண்டு நின்று மகாராஷ்டிராவின் கதை
டெல்லி: தாவூத் இப்ராஹிம் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் உலா வரும் நிலையில், 1990களில் அவருக்கும் சோட்டா ராஜனுக்கும் இடையே இருந்த மோதல் குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் உலா வருகிறது. இது குறித்துப் பல செய்திகள் பரவி வருகிறது.

இந்த தாவூத் இப்ராஹிமும் இவரது முன்னாள் கூட்டாளியான சோட்டா ராஜனுக்கும் இடையே நடந்த மோதலால் மும்பையில் பல காலம் ரத்த ஆறு ஓடியது உங்களுக்குத் தெரியுமா. இது குறித்துப் பார்க்கலாம்.
படுகொலை: கடந்த 2003ஆம் ஆண்டில் ஜனவரி 19ஆம் தேதி துபாயில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஷரத் ஷெட்டி படுகொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத இருவர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு. அங்கிருந்து தப்பிச் சென்றனர். 45 வயதான ஷரத் ஷெட்டி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் பைனஸ் பிஸ்னஸுக்கு மூளையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சோட்டா ராஜன் கேங்கால் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாங்காக்கில் தாவூத்தின் டி-கம்பெனியின் ரவுடிகள் சோட்டா ராஜன் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சோட்டா ராஜன் மிகக் கடுமையாகக் காயமடைந்தார். அவர் உடல்நிலை தேறவே சில மாதங்கள் வரை ஆனது. மேலும், அவரது வலது கரமாக அறியப்பட்ட ரோஹித் வர்மா 32 தோட்டாக்கள் பாய்ந்ததில் உயிரிழந்தார்.
பதிலடி: தனக்கு எதிரான இந்த கொலை முயற்சியை ஏற்பாடு செய்ததில் ஷெட்டிக்கு முக்கிய பங்கு இருப்பதாக சோட்டா ராஜன் நம்பினார். இதன் காரணமாகவே அதற்குப் பதிலடியாக சோட்டா ராஜன் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 1993இல் தாவூத் இப்ராகிம் மற்றும் சோட்டா ராஜன் இடையே நிழல் உலகில் எந்தளவுக்கு மோசமான தாக்குதல்கள் அரங்கேறின என்பதற்குச் சிறு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவங்களை சொல்லலாம். 1993 மும்பை குண்டுவெடிப்பை ஒரு காரணமாகச் சொல்லி தாவூத்திடமிருந்து சோட்டா ராஜன் பிரிந்து சென்றார். பிறகு தனக்கென தனியாக ஒரு கேங்கையும் உருவாக்கிக் கொண்டார்
என்ன காரணம்: மும்பை தொடர் குண்டுவெடிப்பை ஒரு காரணமாகச் சொன்னாலும் சோட்டா ராஜன் வெளியேற மற்றொரு முக்கிய காரணம் இருந்தது. தாவூத் கேங்கில் சோட்டா ஷகீல் என்ற தாதாவுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் அதிகரித்தது. இதனால் அப்போது சில காலமாகவே சோட்டா ராஜன் அதிருப்தியிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சரியாக மும்பை தாக்குதலும் நடக்க அதையே ஒரு காரணமாக வைத்து அங்கிருந்து பிரிந்து வந்துவிட்டார்.
1994 துபாயில் இருந்து கோலாலம்பூருக்குத் தப்பிச் சென்றார் சோட்டா ராஜன். அப்போது அவர் தாவூத்தின் முக்கிய தாதாக்களை உடன் அழைத்துச் சென்றார். அப்போது ஆரம்பித்த கேங் வார் பல ஆண்டுகள் வரை தொடர்ந்தது. இதனால் அடுத்த பல ஆண்டுகள் மும்பை சாலைகளில் ரத்த ஆறு ஓடியது.
படுகொலை: முதலில் 1995இல் சோட்டா ராஜனின் ஆட்கள் தாவூத்தின் முக்கிய பாதுகாவலர்களில் ஒருவரான சுனில் சாவந்தை துபாயில் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக ராஜனுக்கு நெருக்கமாக இருந்த மும்பை ஹோட்டல் அதிபர் ராம்நாத் பையாடேவை தாவூத் ஆட்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த சோட்டா ராஜன் தரப்பு, தாவூத்தின் மூன்று ரவுடிகளை கொன்று பதிலடி கொடுத்தார்.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் பல முக்கிய நபர்களும் கூட பலியாகினர். குறிப்பாக 1995 ஆம் ஆண்டு ஈஸ்ட்-வெஸ்ட் ஏர்லைன்ஸ் தலைவர் தாகிதீன் வஹீத் இந்த கேங் வாரில் சுட்டுக் கொல்லப்பட்டார். நேபாளத்தின் முன்னாள் அமைச்சரான மிர்சா தில்ஷாத் பெக் ஜூன் 1998இல் கொல்லப்பட்டார். தொடர்ந்து சிவசேனா தலைவர் முகமது சலீம் பட்குஜார் என்பவர் 1998 மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படியே இரு தரப்பும் மாறி மாறி கொலை செய்து வந்தனர். 2015இல் இந்தோனேஷியாவின் பாலியில் வைத்து சோட்டா ராஜன் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இப்போது சோட்டா ராஜன் பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் திகார் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications