அக்னிபாத்.. இப்போ எத்தனை வீட்டை இடிப்பீங்க? சொல்லுங்க? மத்திய அரசு மீது ஓவைசி சுளீர் அட்டாக்
டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்களில், எத்தனை பேரின் வீட்டை புல்டோசர்களால் இடித்து தள்ளுவீர்கள் என்று மத்திய பாஜக அரசை ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி சாடியுள்ளார்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பீஹார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டதோடு, ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே சில நாட்களுக்கு முன் நபிகள் நாயகத்தை தவறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய நுபுர் ஷர்மாவை கண்டித்து இஸ்லாமியர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் உத்தரப் பிரதேச மாநில பிரயக்ராஜில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஜாவித் முகமது என்பவர் தான் காரணம் என்று கூறி, அவரின் வீடு புல்டோசாரால் இடித்து தள்ளப்பட்டது. இந்த இரு சம்பவங்களை ஒப்பிட்டு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதுகுறித்து வாரணாசி காவல்துறை மூத்த அதிகாரி, போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் எல்லாருமே குழந்தைகள். அவர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனை குறிப்பிட்டு பேசிய ஓவைசி, இஸ்லாமியர்கள் யாரும் உங்களுக்கு குழந்தைகள் இல்லையா?. இதுபோல் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆலோசனை நடத்தி இருக்கலாமே என்று நுபுர் ஷர்மாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய நடவடிக்கைகளை பற்றி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் அக்னிபாத் போராட்டம் குறித்து அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தவறான முடிவை கண்டித்து இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராடுவது நாட்டின் ஜனநாயக உரிமை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் எத்தனை பேரின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்து தள்ளப் போகிறீர்கள். ஒருவேளை போராட்டத்தில் ஈடுபட்டபோது தவறு செய்திருந்தால், அவரை தண்டிக்க வேண்டியது நீதிமன்றம் தானே ஒழிய, அரசு அல்ல என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஓவைசி, நபிகள் நாயகத்தை தவறாக பேசிய நுபுர் ஷர்ம கைது செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்னும் 6 மாதங்களில் நுபுர் ஷர்மா பெரிய தலைவராக உருவாக்கப்படுவார். ஏன் அடுத்து வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், அவர் முதலமைச்சர் வேட்பாளராக கூட அறிவிக்கப்படலாம். இஸ்லாமியர்களை நீங்கள் எவ்வளவு தவறாக சித்திரிக்கிறீர்களோ, அவ்வளவு அதிக பொறுப்புகள் கொடுக்கப்படும். இதுதான் இந்தியாவில் நிலவும் சூழல் என்று விரக்தியை வெளிப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications