இனிமேல் ரயில் டிக்கெட்களை கேன்சல் செய்தாலும் ஜிஎஸ்டி.. புக் செஞ்சாலும் ஜிஎஸ்டி! எவ்வளவு தெரியுமா
டெல்லி: நாட்டில் முக்கிய போக்குவரத்துத் துறைகளில் ஒன்றாக இருக்கும் ரயில்களில், இப்போது கன்பார்ம் ஆன டிக்கெட்களை கேன்சல் செய்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் குறைந்த விலையில் எந்த இடத்திற்கும் செல்ல வேண்டும் என்றால் அதற்கு முதல் ஆப்ஷன் இந்திய ரயில்வே தான். ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான மக்கள் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர்.
பேருந்துகள் உடன் ஒப்பிடுகையில் விலை குறைவாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ரயில்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மக்களுக்கான அரசா? அதானிக்கான அரசா? என்று தெரியலை.. பாஜக ஒரு ஜிஎஸ்டி அரசு.. நெல்லை முபாரக் விமர்சனம்!
டிக்கெட்
இதனால் பயணிகள் பலரும் தங்கள் டிக்கெட்களை பல வாரங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். பண்டிகை காலங்களில், ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால் பல மாதங்களுக்கு முன்பே பயணிகள் டிக்கெட்களை முன்பதிவு செய்கிறார்கள். இருப்பினும், கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்படும் மாற்றங்களால் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
ரத்து கட்டணம்
அப்படி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஒருவர் கேன்சல் செய்யும் போது இந்திய ரயில்வே ரத்து கட்டணத்தை வசூலிக்கிறது. பயணிகள் பயணிக்கும் ஒவ்வொரு வகுப்பைப் பொறுத்து இந்த ரத்து கட்டணம் மாறுபடும். மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பின்படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களை இனி கேன்சல் செய்யும்போது, அதற்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இழப்பீடு
ரயில் டிக்கெட் அல்லது ஹோட்டல் முன்பதிவுகளை ரத்து செய்தால் அதற்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றையும் ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது சேவை வழங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தைப் பயணிகள் மீறும் போது, அதாவது ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதன் மூலம், சேவை வழங்குநருக்கு (இங்கு இந்தியன் ரயில்வே) ஒரு சிறிய தொகை இழப்பீடு அளிக்கப்படும். இது தான் ரத்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி
ரத்து கட்டணம் என்பது ஒப்பந்தத்தை மீறியதற்காகச் செலுத்தப்படுவதால், அது ஜிஎஸ்டியை ஈர்க்கும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே சதவிகிதம் தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அதன்படி இனி உறுதியான டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
எவ்வளவு
உதாரணமாக முதல் வகுப்பு ஏசி டிக்கெட் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு கேன்சல் செய்யப்பட்டால் அதற்கு 240 ரூபாய் சார்ஜ் வசூலிக்கப்படும். இப்போது அத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி கட்டணமாக 12 ரூபாய் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மட்டுமே இந்த ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது கேன்சல் செய்யும் போதும் அதே ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.
5% ஜிஎஸ்டி
அதேநேரம் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை கேன்சல் செய்தால் மொத்த பயண தொகையில் 25% ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும். அதேநேரம் 12 முதல் 4 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் 50% ரத்து கட்டணம் வசூலிக்கப்படும். இவை அனைத்திற்கும் இப்போது கூடுதலாக 5% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..