40 ஆண்டு காலம் பதவியில் இருக்கேன்.. புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கனும்.. அசோக் கெலாட் பரபர
டெல்லி: நான் 40 ஆண்டு காலம் பதவியில் இருக்கேன் என்றும் எனக்கு பதவி முக்கியம் கிடையாது, புதிய தலைமுறைகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டுள்ளது என்றும் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். முன்பு காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி பின்னர் அப்பதவியில் இருந்து விலகினார்.
இதனால் மீண்டும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். எனினும் அவரால் முன்பு போல் கட்சி பணியில் ஈடுபட முடியவில்லை. மேலும் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பிலும் புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க கோரிக்கைகள் வலுத்தனர்.
பாஜகவை விரட்டி நாட்டை முன்னேற்றுவோம்.. சோனியாவை சந்தித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சூளுரை
அடுத்த மாதம் தேர்தல்
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாத இறுதி வரை அதாவது வருகிற 30-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. பின்னர் தேர்தல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடத்தப்பட்டு, தேர்தல் முடிவு அடுத்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
அசோக் கெலாட்
இந்த தேர்தலில் போட்டியிட திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் முடிவுசெய்துள்ளார். அவர் ஜி 23 குழுவை சேர்ந்த தலைவர். இதேபோல் 71 வயது நிரம்பிய மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட், சோனியா காந்தி ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதால் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
பதவி முக்கியம் கிடையாது
இந்த நிலையில், ஜெய்பூரில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஜெய்சல்மரில் உள்ள தனோட் மாதா கோவிலுக்கு சென்று அசோக் கெலாட் வழிபட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:- நான் ஏற்கனவே சொல்லி வருகிறேன். எனக்கு பதவி முக்கியம் கிடையாது. 50 வருடமாக நான் அரசியலில் இருக்கிறேன். 40 வருடங்களாக நான் அரசியல் சாசன பதவிகளில் இருந்து வருகிறேன். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்.
அனைவரும் இணைந்து
எனவே, புதிய தலைமுறைகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் இணைந்து நாட்டிற்கு தலைமைய கொடுக்க முன்வர வேண்டும்'' என்றார். மேலும், ராஜஸ்தான் முதல்வர் பொறுப்பில் இருந்து விலக மறுப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறித்து பேசிய அசோக் கெலாட், ''நான் இவ்விவகாரம் தொடர்பாக கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதமே சொல்லிவிட்டேன்.
பெரிய மாநிலம் ராஜஸ்தான்
அடுத்த தேர்தலை ஒரு தலைமையின் கீழ் எதிர்கொண்டால் மட்டுமே வெற்றி வாய்பு அதிகரிக்கும் என்று கூறியிருக்கிறேன். அது நானாக இருந்தாலும் சரி, என்னைத் தவிர வேறு யாராக இருந்தாலும் சரி. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஒரே பெரிய மாநிலம் ராஜஸ்தான் மட்டுமே என்பதால் வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து கட்சியின் உயர்மட்ட குழுவிடம் தெரிவித்து இருக்கிறேன்'' என்றார்.
அடுத்த தலைவர் யார்?
இதற்கிடையே, ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்படலாம் என்ற யூகங்கள் வலுத்து வரும் நிலையில், சட்ட சபை சபாநாயகர் சிபி ஜோசியை சச்சின் பைலட் வெள்ளிக்கிழமை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அசோக் கெலாட் இப்படி பேசியிருப்பது சச்சின் பைலட்டிற்கு வழிவிடுவதை சூசகமாகவே குறிப்பிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அடுத்த முதல்வராக ஜோஷிக்கும் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.