இந்தியா- இஸ்ரேல் இடையே நல்லுறவு நீடிக்க இணைந்து செயல்படுவோம்... பிரதமர் மோடி, நஃப்தாலி பென்னட் உறுதி
டெல் அவிவ்/ டெல்லி: இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர இணைந்து செயல்படுவோம் என்று இருநாடுகளின் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் நஃப்தாலி பென்னட் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
இஸ்ரேலில் பிரதமராக இருந்த நெதன்யாகுவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் நெதன்யாகுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து மற்றொரு வலதுசாரி கட்சியான யாமின் தலைவர் நஃப்தாலி பென்னட் புதிய பிரதமராகி உள்ளார். பாலஸ்தீன தாயக நிலப்பரப்பான மேற்கு கரையை போர் மூலம் ஆக்கிரமிப்பதில் மிக உறுதியாக நிற்பவர்.
பாலஸ்தீனர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டுக்குரியவர் நஃப்தாலி பென்னட். இதனால் இனி வரும் நாட்களில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறை உக்கிரமடையும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் நஃப்தாலி பென்னட்டுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில், நஃப்தாலி பென்னட், இஸ்ரேலின் பிரதமரானதற்கு வாழ்த்துகள். அடுத்த ஆண்டு, இருநாடுகளின் இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட்ட 30வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். அப்போது உங்களைச் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நம் இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை ஆழப்படுத்தும் வாய்ப்பையும் எதிர்நோக்குகிறேன். நெதன்யாகுவின் தலைமைத்துவத்துக்கும், இந்தியா-இஸ்ரேல் உறவில் தனிப்பட்ட கவனம் செலுத்தியமைக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி. நெதன்யாகு, இஸ்ரேல் நாட்டின் பிரதமராக, உங்கள் வெற்றிகரமான பதவிக்காலத்தை நீங்கள் முடிக்கும்போது, உங்கள் தலைமைத்துவம் மற்றும் இந்தியா-இஸ்ரேல் உறவு மீதான தனிப்பட்ட கவனம் ஆகியவற்றிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள நஃப்தாலி பென்னட், நமது இரு ஜனநாயக நாடுகளிடையேயான நல்லுறவை வலுப்படுத்த இருவரும் இணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார். இதேபோல் இஸ்ரேலின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான யாயீர் லப்பீடுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.