"காத்து வாக்குல ரெண்டு.." கண்ணா ஒரே மேடையில் ரெண்டு லட்டு தின்ன ஆசையா..! குமுறும் நெட்டிசன்கள்
டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் வருவதைப் போல ஒரு திருமணம் அரங்கேறி உள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் காத்து வாக்குல இரண்டு காதல்! ஒரு நபர் ஒரே நேரத்தில் இரு பெண்களைக் காதலிப்பது தான் இந்தப் படத்தில் கதை.
காதலிப்பது மட்டுமின்றி, இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் அடம் பிடிப்பார். இருப்பினும், கிளைமேக்ஸில் இருவரும் அவரை திருமணம் செய்ய மறுத்துவிடுவார்கள்.

ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாநிலத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. ஆனால், படத்தில் வருவதை போல இல்லாமல் இந்த இளைஞர் ஒரே நேரத்தில் இருவரையுமே திருமணம் செய்து கொண்டுள்ளார். ஒட்டுமொத்த கிராமமே இந்த தம்பதிகளை இணைந்து வாழ்த்தி உள்ளது. இது தொடர்பான படங்களும் இணையத்தில் டிரெண்ங்கில் உள்ளது. அசாதாரணமாக இந்த தம்பதிக்குப் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

திருமணம்
ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகாவில் உள்ள ஒரு கிராமத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் ஓரான். இவர் குசும் லக்ரா மற்றும் ஸ்வாதி குமாரி ஆகிய இரு பெண்களைக் காதலித்துள்ளார். காதலித்தது மட்டுமின்றி இருவரையும் திருமணமும் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி கிராம மக்களே அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

முதல் காதல்
சந்தீப்பும் குசும் லக்ராவும் ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். இவர்களுக்கு ஒன்றாக ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. பிரச்சினை எதுவுமின்றி நன்றாகச் சென்று கொண்டிருந்த இவர்களின் காதல் வாழ்க்கையில் கடந்த ஆண்டில் தான் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளையில் சந்தீப் வேலைக்குச் சென்றுள்ளார்.

இரண்டாம் காதல்
அப்போதுதான் அங்கு வேலைக்கு வந்த சுவாதி குமாரியை சந்தீப் சந்தித்துள்ளார். பார்த்த உடனேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொள்ளவே செங்கல் சூளையில் மட்டுமின்றி வீடு திரும்பிய பின்னரும் கூட இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டுள்ளனர். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவு இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது. சந்தீப்பிற்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் குழந்தை இருப்பதால் இரு குடும்பத்தினரும் இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருமணம்
அதன் பின்னர், இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது. தொடர் சண்டைக்குப் பிறகு, கிராம மக்கள் பஞ்சாயத்து செய்து, சந்தீப்பை இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கு அப்பெண்களோ இல்லை அவர்களின் குடும்பத்தினரோ எதிர்க்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில், சந்தீப் ஒரே நேரத்தில் இரு பெண்களுக்கும் தாலி கட்டினார்.

இருவர் மீதும் காதல்
இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி தவறு என்றாலும் கூடத் தான் இருவரையும் நேசிப்பதாகவும் அவர்களில் ஒருவரை விட்டுவிட முடியாது என்றும் சீரியாஸாக கூறுகிறார் சந்தீப்!

மத்திய பிரதேசம்
முன்னதாக கடந்த மாதம் மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினரின் முறைப்படி 42 வயது நபர் ஒருவர் தனது மூன்று லிவ் இன் பார்ட்னர்களை ஒரே விழாவில் திருமணம் செய்து கொண்டார். மூன்று பெண்களுடன் அவருக்கு இருக்கும் ஆறு குழந்தைகளும் திருமண சடங்குகளில் பங்கேற்றனர், மோரி ஃபாலியா கிராமத்தில் நடந்த நிகழ்வும் இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications