Ahmedabad Plane Crash: நான் உயிர் பிழைத்தது எப்படி? திக் திக் நிமிடங்களை விளக்கிய விஷ்வாஸ் குமார்
டெல்லி: என் கண்முன்னே விமான பணிபெண்கள், பயணிகள் இறப்பதை பார்த்தேன். நான் எப்படி பிழைத்தேன் என்பது எனக்கே தெரியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணி விஷ்வாஸ் குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகமதாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணி விஷ்வாஸ் குமார், டிடி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பது எனக்கு தெரியவில்லை. என் கண் முன்னால் விமான பணிப்பெண்கள், பயணிகள் துடிதுடித்து இறந்தார்கள்.
விமானம் வெடித்த போது என் இருக்கையின் அருகே விரிசல் விழுந்தது. அந்த விரிசலை பயன்படுத்தி நான் வெளியே குதித்தேன். அப்போது என் இடது கை எரிந்தது. உரிய நேரத்தில் என்னை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.
நான் விமானத்தில் இருந்து குதிக்கவில்லை. சீட் உடைந்ததால் நான் தூக்கி எறியப்பட்டேன். விமானம் தரையிறங்கிய பகுதி மிகவும் தாழ்வான பகுதி. நான் என் சீட் பெல்ட்டை எடுத்தேன். அப்போது எனக்கு உயிர் பிழைப்பேனா என்ற அச்சம் எழுந்தது. ஆனாலும் நான் தரை மட்டத்திற்கு அருகில் இருந்ததால் என்னால் வெளியே வர முடிந்தது.
என்னால் நடக்கக் கூட முடியவில்லை. என் கண் முன்னால் நிறைய பேர் இறந்ததை பார்த்த போது நானும் இறப்பேன் என்றுதான் நினைத்தேன். இவ்வாறு விஷ்வாஸ் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் நேற்று பகல் 1.43 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 12 ஆம் தேதி பகல் 1.38 மணிக்கு புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே லிப்ட் ஆவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து விமானி, விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது அது ஒரு குடியிருப்பு பகுதியில் வெடித்து சிதறியது. விமானத்தில் எரிவாயு நிறைய இருந்ததால் விமானம் தீப்பிடித்தது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர், ஒரு கனடா நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டவர் என சொல்லப்படுகிறது.
குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்ததால் அந்த கட்டடம் தீப்பற்றி எரிந்ததாக சொல்லப்படுகிறது. இதில் விடுதி அறையில் தங்கியிருந்த 25 மாணவர்கள் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உயிரிழந்தார். சுமார் 11 ஆண்டு பழமையான இந்த விமானம் 600 முதல் 800 அடி உயரம் வரை பறந்து அடுத்த நொடியே வெடித்தது. விமானத்தில் பிரச்சினை எழுந்ததுமே விமான மே டே கால் செய்தார்.
இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணித்த 242 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என சொல்லப்பட்ட நிலையில் 11 ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஷ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்தார். அவர் காயங்களுடன் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி , விஷ்வாஸ் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வும் செய்திருந்தார். விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் உயிர் பிழைத்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் நெகிழ்கிறார்கள்.












Click it and Unblock the Notifications