வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன்... பிரியங்கா காந்தி சொல்கிறார்
லக்னோ: எனது குழந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன். ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று உத்தரபிரதேசம் (கிழக்கு) காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
7 வது மற்றும் கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தனித்தனியே செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, மோடி இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் மிக மிக பலவீனமானவர். ஆனால் அதை அவர் திறமையாக திசை திருப்பி வருகிறார் என்று விமர்சனம் செய்தார். விவசாயிகளையும், வியாபாரிகளையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாதவர் என்று மோடியை விமர்சனம் செய்த பிரியங்கா காந்தி, கோட்சே பற்றி எழுந்துள்ள சர்ச்சையில் அவர் தனது தெளிவான கருத்தை சொல்லவில்லை என்றார்.
எனது குழந்தைகளை நான் அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன் என்றும், தாய் என்ற முறையில் அவர்களை வேறு துறைக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறேன் எனவும் தெரிவித்த அவர், ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் பதிலளித்தார்.
மேலும், எதிர்காலத்தில் அவர்கள் தங்களது பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. எனவே அவர்களை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க மாட்டேன் என்றும் கூறினார்.
அரசியலில் ராகுல் காந்தி என்னை விட 15 ஆண்டுகள் மூத்தவர் என்றும் நான் அரசியலுக்கு வந்து 15 வாரங்கள் தான் ஆவதாக கூறிய பிரியங்கா காந்தி, ராகுலிடம் இருந்து தான் அரசியல் பற்றி கேட்டு வருவதாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications